Published : 20 May 2024 12:06 PM
Last Updated : 20 May 2024 12:06 PM

5 ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 23.66% வாக்குப்பதிவு

வடக்கு காஷ்மீரின் ஷாகுந்த் பந்திபோரா மாவட்டத்தில் வாக்களிக்கக் காத்திருக்கும் வாக்காளர்கள். படம்: நிசார் அகமது.

புதுடெல்லி: நாடு முழுவதும் 8 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் 49 தொகுதிகளில் இன்று 5 ஆம் கட்டமாக தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் காலை 11 மணி நிலவரப்படி 23.66% வாக்குப்பதிவாகியுள்ளது. மேற்குவங்கத்தில் அதிகபட்சமாகவும், மகாராஷ்டிராவில் குறைவாகவும் வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, 5-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. அதன்படி உத்தர பிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பிஹார், ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு காஷ்மீர், லடாக்கில் தலா 1 தொகுதிஎன மொத்தம் 49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

உத்தரப்பிரதேசம்: 27.76%

மகாராஷ்டிரா: 15.93%

மேற்குவங்கம்: 32.07%

பிஹார்: 21.11%

ஒடிசா: 21.07%

ஜார்க்கண்ட்: 26.18%

ஜம்மு காஷ்மீர்: 21.37%

லடாக்: 27.87% என வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது.

இன்றைய தேர்தலில் மொத்தம் 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, லக்னோ தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அமேதி தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பிஹாரின் ஹாஜிபூர் தொகுதியில் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான், பிஹாரின் சரண் தொகுதியில் பாஜக மூத்த தலைவர் ராஜீவ் பிரதாப் ரூடி, ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் லாலுவின் மகன் ரோகிணி ஆச்சார்யா, மும்பை வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் தேசிய மாநாடு கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா ஆகியோர் இன்றைய தேர்தல் களத்தில் நிற்கும் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x