Published : 16 May 2024 05:13 PM
Last Updated : 16 May 2024 05:13 PM

“பெண்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பேன்” - சுவாதி மாலிவால் சர்ச்சை; பிரியங்கா கருத்து

பிரியங்கா காந்தி

புதுடெல்லி: “எந்த ஒரு பெண்ணுக்கு எங்கு கொடுமை நடந்தாலும், நாங்கள் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக நிற்போம்” என சுவாதி மாலிவால் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யும், டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவருமான சுவாதி மாலிவால், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சுவாதி மாலிவால் விவகாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “எந்த ஒரு பெண்ணுக்கு எங்கு கொடுமை நடந்தாலும், நாங்கள் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக நிற்போம். அவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, நான் எப்போதும் பெண்களுக்கு ஆதரவாக நிற்கிறேன். இந்த விவகாரம் குறித்து ஆம் ஆத்மி விவாதித்து முடிவெடுக்கும். அது அவர்களைப் பொறுத்தது” என்று தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த திங்கள்கிழமை அன்று ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யும் டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவருமான ஸ்வாதி மாலிவால், டெல்லி காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டார். அதில் டெல்லி முதல்வரின் அதிகாரபூர்வ இல்லத்தில் அரவிந்த் கேஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளரால் தாம் தாக்கப்பட்டதாக புகார் கூறினார்.

இதையடுத்து டெல்லி போலீஸார் முதல்வர் கேஜ்ரிவால் வீட்டுக்குச் சென்றனர். இது அரசியல் ரீதியாக அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாருக்கு தேசிய மகளிர் ஆணையம் இன்று சம்மன் அனுப்பி உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபவ் குமாருக்கு தேசிய மகளிர் ஆணையம் அனுப்பியுள்ள சம்மனில், “எம்.பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக வந்த செய்திகளை அடுத்து இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த விவகாரம் தொடர்பாக நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு நீங்கள் ஆஜராக வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x