Published : 14 May 2024 08:11 AM
Last Updated : 14 May 2024 08:11 AM

அதானி - அம்பானி நலனுக்காக மோடி: ராகுல் விமர்சனம்

எனது குடும்பம் ரேபரேலி மக்களுக்காக உழைத்து வருகிறது. அதேநேரம், பிரதமர் நரேந்திர மோடிஅதானி-அம்பானி உள்ளிட்ட சில தொழிலதிபர்களின் நலனுக்காக மட்டும் உழைக்கிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்.

ரேபரேலியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது: சில தொழிலதிபர்களின் நலனுக்காக மோடி அரசு ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தது. இது, மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு 24 ஆண்டு காலம் ஒதுக்கப்படும் நிதிக்கு சமமாகும்.

ரேபரேலி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு எனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் மற்றும் தாயார் சோனியா ஆகியோர்கடந்த காலங்களில் அளப்பரிய பங்களிப்பினை வழங்கியுள்ளனர். அதேநேரம், அதானி-அம்பானியின் நலனுக்காக மட்டுமே பிரதமர் மோடி அனுதினமும் உழைத்து வருகிறார்.

விவசாயிகள் மற்றும் வேலையில்லா இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஊடகங்கள் புறக்கணித்து வருகின்றன. இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை குடும்பங்களின் பட்டியலை தயார் செய்து அவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

மேலும், சிறு விவசாயிகள் கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து, அக்னிவீர் திட்டத்துக்கு பதிலாக பாதுகாப்பு படைகளில் ஓய்வூதியத்துடன் கூடிய நிரந்தர வேலை ஆகிய திட்டங்கள் அமல்படுத்தப்படும். மேலும், வேலையில்லா இளைஞர்களுக்கு பொதுத் துறை நிறுவனங்களில் ஓராண்டு பயிற்சியை வழங்கி, தகுதியின் அடிப்படையில் நிரந்த அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

உத்தர பிரதேச ரேபரேலி மக்களவை தொகுதிக்கு ஐந்தாம் கட்டமாக மே 20-ல் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராகுலை எதிர்த்து அம்மாநில அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங்கை பாஜக நிறுத்தியுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x