Published : 13 May 2024 06:52 PM
Last Updated : 13 May 2024 06:52 PM

தேர்தல் பிரச்சாரம் செய்ய இடைக்கால ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் மனு

புதுடெல்லி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்குக் ஜாமீன் வழங்கியதை அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நில மோசடியில் தொடர்புடைய பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஹேமந்த் சோரன், ஜனவரி 31 அன்று கைது செய்யப்பட்டார். தற்போது, நீதிமன்ற காவலில் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியதைப் போல தனக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், தானும் ஜார்க்கண்ட்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

ஹேமந்த் சோரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட உத்தரவுக்கு உட்பட்டது இந்த வழக்கு. தேர்தல் பிரசாரம் செய்ய எனது மனுதாரருக்கும் இடைக்கால ஜாமீன் தேவை" என வாதிட்டார்.

அமலாக்க இயக்குனரகத்தை விசாரிக்காமல் ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கை மே 20-ஆம் தேதிக்கு பட்டியலிடுவதாகக் கூறினர்.

சோரன் தரப்பில் ஆஜரான சிபல் மற்றும் அருணாப் சவுத்ரி ஆகியோர், "அதற்குள் தேர்தல் முடிந்துவிடும். இந்த விவகாரத்தில் நீண்ட நாள் எடுத்துக்கொண்டால் அது அவருக்கு பாரபட்சம் காட்டுவதாக ஆகிவிடும்" என்று தெரிவித்தனர்.

இந்த வாரம் நிறைய விஷயங்கள் பட்டியலிடப்பட்டிருப்பதால், அதிக வேலை இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர், மே 17-ஆம் தேதிக்கு வழக்கை விசாரிக்க நீதிபதிகள் ஒப்புக்கொண்டனர். மேலும், மே 17-ஆம் தேதிக்குள் இது விஷயத்தில் பதில் அளிக்க அமலாக்க இயக்குனரகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குனரகத்தால் தான் கைது செய்யப்பட்டதற்கு எதிராக ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மே 3-ஆம் தேதி மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், இடைக்கால ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்திருந்த மனுவையும் உயர் நீதிமன்றம் அன்றைய தினமே தள்ளுபடி செய்தது. இந்நிலையில், இதை எதிர்த்து தற்போது அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜார்க்கண்டில் 4 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 10 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல், மூன்று கட்டங்களாக மே 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x