Published : 12 May 2024 09:44 AM
Last Updated : 12 May 2024 09:44 AM

“காங். 50 இடங்களில் கூட வெற்றி பெறாது” - பிரதமர் மோடி உறுதி

புவனேஸ்வர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 50 இடங்களில் கூட வெற்றி பெறாது என்று ஒடிசாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் கந்தமால் மற்றும் போலாங்கிர் மக்களவை தொகுதிகளில், பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

ஒடிசாவில் ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன. ஆனாலும் இம்மாநில மக்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகளாக உள்ளனர். இதற்குக் காரணமானவர்களை (பிஜு ஜனதா தளம்) வரும் தேர்தலில் ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும். ஒடிசா மாநிலத்தின் பெருமைக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே பாதுகாக்க முடியும். தேர்தலுக்குப் பிறகு இங்கு இரட்டை இன்ஜின் அரசு (மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சி) அமையும். ஒடிசா மொழி மற்றும் கலாச்சாரத்தை புரிந்துகொள்ளக் கூடிய, இந்த மண்ணின் மைந்தர் ஒருவர் புதிய முதல்வராக நியமிக்கப்படுவார்.

நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுவதற்கான 10 சதவீத இடத்தில் கூட காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியாது. இன்னும் சொல்லப் போனால் 50 இடங்களில்கூட அக்கட்சி வெற்றி பெறாது.

காங்கிரஸ் கட்சியின் இளவரசர் கடந்த 2014-ம் ஆண்டில் எழுதப்பட்ட அதே குறிப்பையே இன்று வரை வாசித்து வருகிறார். எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இந்த முறை தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும்.

அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான மத்திய பாஜக அரசு 26 ஆண்டுக்கு முன்பு இதே நாளில் பொக்ரானில் அணுகுண்டு சோதனையை நடத்தியது. இதன் மூலம் உலக அரங்கில் இந்தியா மீதான மதிப்பு பலமடங்கு உயர்ந்தது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற நாட்டு மக்களின் 500 ஆண்டுகால கோரிக்கை இப்போது நிறைவேறி உள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பழங்குடியின பெண்ணை குடியரசுத் தலைவராக பாஜக நியமித்தது. அவர் இப்போது முப்படைகளின் தளபதியாக விளங்குகிறார். இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க பாஜவுக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x