பிரதமர் மோடி | கோப்புப்படம்
பிரதமர் மோடி | கோப்புப்படம்

“நானும் பார்த்து மகிழ்ந்தேன்” - தனது டீப் ஃபேக் வீடியோவை ரீ-ட்வீட் செய்த பிரதமர் மோடி

Published on

புதுடெல்லி: பிரதமர் மோடி தனது டீப் ஃபேக் வீடியோவை எக்ஸ் தளத்தில் ரீ-ட்வீட் செய்துள்ளார். அந்த வீடியோவை பார்த்து தான் மிகவும் மகிழ்ந்ததாக அதில் தெரிவித்துள்ளார்.

நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் எதுவும் சாத்தியம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. அந்த வகையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் டீப் ஃபேக் வீடியோக்கள் வைரலாக பகிரப்பட்டு இந்திய தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது. சமயங்களில் அதிர்வலைகளையும் இந்த வீடியோக்கள் ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் பிரதமர் மோடி மேடை ஒன்றில் ராக்ஸ்டார் போல துள்ளலாக நடனமாடும் வீடியோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஆரஞ்சு நிற மேலாடையை பிரதமர் மோடி அணிந்துள்ளார். அது இப்போது பரவலான இணையதள பயனர்களின் பார்வையை பெற்றுள்ளது.

“சர்வாதிகாரி இந்த வீடியோவை போஸ்ட் செய்வதற்காக என்னை கைது செய்யப்போவதில்லை என்பது எனக்கு தெரியும். அதனால் இதை பகிர்கிறேன்” என கிருஷ்ணா எனும் நபர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தான் பிரதமர் மோடியின் பார்வைக்கு சென்றுள்ளது.

“எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை பார்த்து மகிழ்ந்தேன். தேர்தல் நேரத்தில் இத்தகைய படைப்பாற்றல் மெய்யான மகிழ்ச்சியை தருகிறது” என பிரதமர் மோடி இந்த ட்வீட்டை Quote செய்துள்ளார். இதை தேர்தல் கால வேடிக்கை எனவும் சொல்லியுள்ளார்.

டீப் ஃபேக் குறித்து பிரதமர் மோடி: கடந்த நவம்பர் மாதம் டீப் ஃபேக் குறித்து பிரதமர் மோடி தெரிவித்தது. செயற்கை நுண்ணறிவு உதவியுடன் டீப் ஃபேக் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் போலி வீடியோக்கள், ஆடியோக்கள், புகைப்படங்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும். ஒருபோதும் தவறாக பயன்படுத்தக் கூடாது.

இதுபோன்ற டீப் ஃபேக் வீடியோக்கள் குறித்து பொதுமக்களிடையே ஊடகங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முன்னோடியான சாட்ஜிபிடி நிறுவனம், டீப் ஃபேக் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடியோக்களை அடையாளம் கண்டு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என சொல்லியிருந்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in