Published : 07 May 2024 06:05 AM
Last Updated : 07 May 2024 06:05 AM

3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 93 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு

மூன்றாவது கட்ட மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் 93 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக அசாம் மாநிலம், குவாஹாட்டியில் இருந்து தேர்தல் அலுவலர்கள் நேற்று அவரவர் வாக்குச் சாவடிகளுக்கு புறப்பட்டனர். படம்: பிடிஐ

புதுடெல்லி: 3-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் 93 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 102 தொகுதிகள், ஏப்ரல் 26-ம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

மூன்றாவது கட்டத்தில் 94 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனிடையே இரண்டாவது கட்ட தேர்தலில் மத்திய பிரதேசத்தின் பேதுல் தொகுதி பகுஜன் சமாஜ்வேட்பாளர் அசோக் பலாவி உயிரிழந்ததால் அந்த தொகுதிக்கான தேர்தல் 3-வது கட்டத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதன்படி 3-வது கட்டத்தில் ஒரு தொகுதி அதிகரித்து 95 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

குஜராத்தில் சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். எனவே 3-வது கட்டத்தில் அந்த தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. மோசமான வானிலை காரணமாக 3-வது கட்டத்தில் தேர்தல் நடைபெற வேண்டிய ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக்-ரஜோரி மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு மே 25-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக 3-வது கட்டத்தில் 93 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.

இதன்படி அசாமில் 4, பிஹாரில் 5, சத்தீஸ்கரில் 7, டையூ-டாமனில் 2, கோவாவில் 2, குஜராத்தில் 25, கர்நாடகாவில் 14, மத்திய பிரதேசத்தில் 9, மகாராஷ்டிராவில் 11, உத்தர பிரதேசத்தில் 10, மேற்குவங்கத்தில் 4 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

மூன்றாவது கட்டத்தில் மொத்தம் 1,352 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 1,229 பேர் ஆண்கள். 123 பேர் பெண்கள் ஆவர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சோனல் படேல் களமிறங்கி உள்ளார்.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள், உத்தர பிரதேசத்தின் மெயின்புரி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் ஜெய்வீர் சிங் களம் காண்கிறார்.

மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜோதிர் ஆதித்ய சிந்தியா மத்திய பிரதேசத்தின் குணா மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகான் விதிஷா மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார்) கட்சியின் சார்பில் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே மகாராஷ்டிராவின் பாராமதி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தேசியவாத காங்கிரஸ் சார்பில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின்மனைவி சுனித்ரா பவார் போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, கர்நாடகாவின் தார்வாட் தொகுதியில் 5-வது முறையாக போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வினோத் களத்தில் உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x