Published : 03 May 2024 10:06 AM
Last Updated : 03 May 2024 10:06 AM

லாலு மகள் ரோகிணிக்கு எதிராக ‘லாலு’ போட்டி

ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் பிஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவுக்கு 7 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இதில் 2-வது மகள் ரோகிணி ஆச்சார்யா (44). கடந்த 2022-ம் ஆண்டில் லாலுவுக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அப்போது ரோகினி ஆச்சார்யா தந்தைக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கினார்.

லாலுவின் மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ்பிரதாப் யாதவ், மூத்த மகள் மிசா பாரதி ஆகியோர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில் ரோகிணி ஆச்சார்யாவும் தற்போதைய மக்களவைத் தேர்தல் மூலம் அரசியலில் களமிறங்கி உள்ளார். பிஹாரின் சரன் தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளராக அவர் போட்டியிடுகிறார்.

அவருக்கும் பாஜக வேட்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்த சூழலில் சரன் மக்களவைத் தொகுதியில் லாலு மகள் ரோகிணிக்கு எதிராக ஆர்ஜேபி என்ற கட்சியின் சார்பில் லாலு பிரசாத் யாதவ் என்ற வேட்பாளர் போட்டியிடுகிறார். சரன் மாவட்டம், ரஹீம்பூரை சேர்ந்த அவர் தற்போது 13-வது முறையாக சரன் மக்களவைத் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

லாலு பிரசாத் யாதவ்

இதுகுறித்து அவர் கூறியதாவது: கடந்த 2001-ம் ஆண்டில் முதல்முறையாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டேன். அப்போதுமுதல் தொடர்ந்து பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறேன். கடந்த 2014-ம் ஆண்டில் லாலு மனைவி ரப்ரி தேவிக்கு எதிராக போட்டியிட்டேன். இப்போது அவரது மகள் ரோகிணிக்கு எதிராக போட்டியிடுகிறேன்.

நான் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். உள்ளூரில் சமூக சேவைகளை செய்து வருகிறேன். நான் விளம்பரத்துக்காக போட்டியிடுவதாக பலர் விமர்சனம் செய்கின்றனர். அதைப்பற்றி கவலைப்படவில்லை. மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தேர்தலில் போட்டியிடுகிறேன். இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x