Published : 12 Apr 2024 07:13 PM
Last Updated : 12 Apr 2024 07:13 PM

மறு அறிவிப்பு வரும் வரை ஈரான், இஸ்ரேலுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம்: மத்திய அரசு அறிவுரை

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி: மறு அறிவிப்பு வரும் வரை ஈரான் அல்லது இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் என்று வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து இந்தியர்களும் ஈரான் அல்லது இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தற்போது ஈரான் அல்லது இஸ்ரேலில் வசிக்கும் அனைவரும் அங்குள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், தங்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறும், வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அச்சம் காரணமாக தூதரக அதிகாரிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி இருப்பதாக இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்ததை அடுத்து, ஈரான், இஸ்ரேல், லெபனான் மற்றும் பாலஸ்தீனியப் பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று பிரான்ஸ் அரசு தனது குடிமக்களை எச்சரித்தது.

இஸ்ரேலின் ராணுவ மையங்களைக் குறிவைத்து 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் டஜன் கணக்கான ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் தொடுக்க ஈரான் திட்டமிட்டிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

இதனிடையே, "ஈரான் தனது எல்லையில் இருந்து தாக்கினால், இஸ்ரேல் பதிலடி கொடுத்து ஈரான் மீது தாக்குதல் நடத்தும்" என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு இரு நாடுகளையும் ஜெர்மனியும் ரஷ்யாவும் கேட்டுக் கொண்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x