Last Updated : 24 Mar, 2024 11:03 AM

 

Published : 24 Mar 2024 11:03 AM
Last Updated : 24 Mar 2024 11:03 AM

பாஜகவில் தேவகவுடா கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு: பிரஜ்வல் ரேவண்ணா தகவல்

பிரஜ்வல் ரேவண்ணா

கர்நாடகாவில் பாஜக கூட்டணியில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா தெரிவித்தார்.

கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதில் மண்டியா, கோலார், ஹாசன், தும்கூர், பெங்களூரு ஊரகம் ஆகிய 5 தொகுதிகளை மஜத கேட்டதாக தெரிகிறது. அதனை ஏற்க மறுத்த பாஜக மேலிடம், 2 தொகுதிகளை தருவதாக கூறியதாக செய்திகள் வெளியாகின. இதனால் முன்னாள் முதல்வரும் மஜத தலைவருமான குமாரசாமி அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இரு கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலவியது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும் மஜத எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா கூறுகையில், ''பாஜக - மஜத கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை. இரு கட்சிகளும் ஒற்றுமையாக தேர்தலை எதிர்கொள்ளும். கர்நாடகாவில் இந்த கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

பிரதமர் மோடியின் ஆட்சியை மீண்டும் அமைக்க மஜத துணையாக நிற்கும். பாஜக கூட்டணியில் மஜத-வுக்கு 3 இடங்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன. அது தொடர்பாக இரு கட்சிகளின் தலைவர்கள் ஓரிரு நாட்களில் அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள். எந்தெந்த தொகுதி, யார் போட்டியிடுவார்கள்? என்பதை நான் சொல்லக் கூடாது'' என்றார்.

இதனிடையே மஜதவுக்கு மண்டியா, ஹாசன், கோலார் ஆகிய 3 தொகுதிகளை பாஜக மேலிடம் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் தேவகவுடாவின் மருமகனும் மருத்துவருமான மஞ்சுநாத், பாஜக வேட்பாளராக பெங்களூரு ஊரகம் தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x