Published : 05 Mar 2024 01:31 PM
Last Updated : 05 Mar 2024 01:31 PM

மாவோயிஸ்ட் தொடர்பு வழக்கில் டெல்லி பல்கலை. முன்னாள் பேராசிரியர் ஜி.என். சாய்பாபா விடுவிப்பு

முன்னாள் பேராசிரியர் சாய்பாபா | கோப்புப்படம்

நாக்பூர்: மாவோயிஸ்ட்கள் தொடர்பில் இருந்த வழக்கில் இருந்து டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா மற்றும் 5 பேரை மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை செவ்வாய்க்கிழமை விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

மாவோயிஸ்டுகளுடன் இணைந்து சதியில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து முன்னாள் பேராசிரியர் சாய்பாபா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் மும்பை உயர் நீதிமன்ற கிளை இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளது. முன்னதாக, இதே வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்ட 5 பேரை, மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை கடந்த 2022, அக்.14-ம் தேதி விடுவித்திருந்தது.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவினை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, அந்த வழக்கை உயர் நீதிமன்றம் மீண்டும் புதிதாக விசாரணை செய்யவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

அதன்படி வழக்கினை விசாரணை செய்த மும்பை உயர் நீதின்ற நீதிபதிகள், வினய் ஜோஷி மற்றும் வால்மீகி எஸ்.ஏ.மெனேசஸ் அடங்கிய அமர்வு “குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக வழக்கில் குற்றங்களை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறி விட்டது. சட்டப்பூர்வ மற்றும் முறையான அனுமதி இல்லாததால், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் வழங்கப்பட்ட அனுமதி செல்லாது” என்று தெரிவித்தனர்.

மேலும், “நீதியின் விதிகளை மீறி கட்ச்ரோலி செஷன்ஸ் நீதிமன்றம் நடத்திய விசாரணை நீதியின் தோல்விக்குச் சமம். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சட்டப்பூர்வமான பிடிப்பு அல்லது ஆதராங்களை நிறுவ அரசுத்தரப்புத் தவறி விட்டது. விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்தின் படி செல்லதக்கது இல்லை. எனவே நாங்கள் மேல்முறையீடுகளை அனுமதிக்கிறோம். மேலும் தடைசெய்யப்பட்ட தீர்ப்பினை ரத்து செய்கிறோம். குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்கிறோம்” என்று உத்தரவிட்டனர். சக்கர நாற்காலியில் வலம்வரும் 54 வயதாகும் சாய்பாபா, 99 சதவீத மாற்றுத்திறனாளியாவார். அவர் தற்போது நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வழக்கு பின்னணி: கட்ச்ரோலி செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு, மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு வைத்திருந்தார் மற்றும் நாட்டுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டார் எனவும்கூறி சாய்பாபா உள்ளிட்டர்வகளை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. மேலும் சாய்பாபா மற்றும் இருவர் உள்நோக்கத்துடன் நக்சல் இலக்கியங்களை வைத்திருந்ததாகவும், கட்ச்ரோலி மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்களை வன்முறைக்கு தூண்டியதாகவும் குற்றம்சாட்டியது.

இதனை எதிர்த்து சாய்பாபா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். நீதிபதிகள் ரோஹித் தியோ, அனில் பன்சாரே அடங்கிய அமர்வு வழக்கிலிருந்து ஜி.என்.சாய்பாபாவை விடுவித்தும் சாய்பாபாவை உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்கும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x