Published : 26 Feb 2024 10:51 AM
Last Updated : 26 Feb 2024 10:51 AM

அமலாக்கத் துறையின் 7-வது சம்மனை நிராகரித்த அரவிந்த் கேஜ்ரிவால் சொல்வது என்ன?

அரவிந்த் கேஜ்ரிவால்

புதுடெல்லி: டெல்லி மதுபான ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை அனுப்பிய 7-வது சம்மனையும் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் நிராகரித்துள்ளார். வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அமலாக்கத் துறை சட்ட நடைமுறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சிக் கூறியுள்ளது.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி கூறிகையில், "இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை மார்ச் 16ம் தேதி நடக்க இருக்கிறது. எனவே அமலாக்கத் துறை தினமும் சம்மன் அனுப்புவதை நிறுத்திவிட்டு பொறுமையாக நீதிமன்றத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.

டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2021-ம் ஆண்டில் புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு அமல்படுத்தியது. இதில் ஊழல் நடந்ததாகவும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உட்பட பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கு விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வருக்கு கடந்த வியாழக்கிழமை (பிப்.22) 7-வது முறையாக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. முன்னதாக, வழக்கு தொடர்பாக கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சார்பில் ஏற்கெனவே 6 முறை சம்மன்கள் அனுப்பப்பட்டன. ஆனால், இந்த சம்மன் சட்டவிரோதமானது எனக் கூறி வரும் கேஜ்ரிவால் இதுவரை விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை சார்பில் டெல்லியில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. வழக்கு தொடர்பாக கடந்த 17-ம் தேதி நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது. அன்றைய தினம் காணொலி வாயிலாக அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றதால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவர் விளக்கம் அளித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 16-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x