Published : 17 Feb 2024 03:14 PM
Last Updated : 17 Feb 2024 03:14 PM

“எனக்கு கவலை இல்லை” - லாலுவின் அழைப்புக்கு நிதிஷ் குமார் பதில்

பாட்னா: “ஐக்கிய ஜனதா தளத்துக்காக எப்போதும் கதவுகள் திறந்திருக்கிறது” என்று ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறிய கருத்துக்கு நிதிஷ் குமார் எதிர்வினையாற்றியுள்ளார். இது குறித்து நிதிஷ் குமார், “யார் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. அங்கு நிலைமை சரியில்லாததால் நான் அவர்களைவிட்டு வெளியேறினேன். எங்களுக்குள் என்ன பிரச்சினை என்று ஆய்வு செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) - ஆர்ஜேடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அண்மையில் ஆர்ஜேடி கூட்டணியிலிருந்து விலகிய நிதிஷ் குமார் மீண்டும் பாஜகவுடன் இணைந்து கூட்டணி அமைத்து பிஹார் முதல்வராக பொறுப்பேற்றார். இண்டியா கூட்டணியை வலிமையாக்க தான் எடுத்த முயற்சிகளுக்கு உரிய ஒத்துழைப்பு இல்லை என்பதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், சிறுநீகர மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு பொதுவெளியில் நீண்ட காலம் தலைகாட்டாமல் இருந்த லாலு, பிஹார் சட்டப்பேரவைக்கு கடந்த வியாழனன்று வருகை தந்தார். அப்போது லாலுவும், நிதிஷும் சந்தித்து கொண்டு பரஸ்பரம் நலம் விசாரித்து கைகுலுக்கிக் கொண்டனர்.

அப்போது, மீண்டும் ஆர்ஜேடி - ஜேடியு கூட்டணி அமைய வாய்ப்புள்ளதா என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு லாலு “அவர் (நிதிஷ் குமார்) திரும்பி வரட்டும் பிறகு பார்ப்போம். அவருக்காக எங்கள் கூட்டணி கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்’’ என்றார்.

1970-களில் மாணவர் சங்க தலைவராக இருந்த காலத்திலிருந்தே லாலுவின் நெருங்கிய நண்பராக விளங்கியவர் நிதிஷ். அந்த நட்பை சிறப்பிக்கும் விதமாகவே லாலு இவ்வாறு கூறியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) இண்டியா கூட்டணி பற்றியும், லாலுவின் கருத்து குறித்தும் இதிஷ் குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், “யார் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி எனக்கு கவலையில்லை. அங்கு நிலைமை சரியில்லாததால் நான் அவர்களைவிட்டு வெளியேறினேன். இருப்பினும், எங்களுக்குள் என்ன பிரச்சினை என்று ஆய்வு செய்வோம்” என்றார்.

தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, ராஷ்ட்ரிய லோக் தள கட்சித் தலைவர் ஜெய்ந்த் சிங் ஆகியோரும் இண்டியா கூட்டணியில் இருந்து விலகுவதாக தகவல்கள் வருகின்றன என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “அனைவரையும் ஒன்றிணைக்க நான் முடிந்தளவு முயற்சி செய்தேன். அந்தக் கூட்டணி எப்போதோ முடிந்த கதையாகிவிட்டது. நான் இப்போது பிஹார் மக்களுக்காகப் பணியாற்றி வருகிறேன். எப்போதும் அதைச் செய்வேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x