Published : 17 Feb 2024 10:44 AM
Last Updated : 17 Feb 2024 10:44 AM

அமலாக்கத் துறை வழக்கு | வீடியோ கான்பரன்சிங் மூலம் டெல்லி கோர்ட்டில் முதல்வர் கேஜ்ரிவால் ஆஜர்

புதுடெல்லி: மதுபான கொள்கை வழக்கில், அமலாக்கத் துறை சம்மனை தொடர்ந்து புறக்கணித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவர் இன்று (சனிக்கிழமை) காணொலி காட்சி மூலம் ஆஜரானார். மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு, அமலாக்கத் துறை இதுவரை 6 முறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் அவர் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் புறக்கணித்து வந்தார்.

இந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு ஆஜராக கேஜ்ரிவாலுக்கு உத்தரவிடும்படி டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட டெல்லி நீதிமன்றம், விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராகும்படி கேஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கு தொடர்பாக கேஜ்ரிவால் டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். சட்டப்பேரவையில் அவர் தாக்கல் செய்துள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெறவுள்ளதால் நேரில் ஆஜராகாமல் காணொலி மூலம் ஆஜராகியுள்ளார்.

கேஜ்ரிவாலின் குற்றச்சாட்டு: டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சிக்கு 62 இடங்களும், பாஜகவுக்கு 8 இடங்களும் உள்ளன. இந்த நிலையில், டெல்லி அரசை கவிழ்க்கும் சூழ்ச்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாகவும், தனது கட்சி எம்எல்ஏக்களை அக்கட்சியை விலை பேசுவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

அமலாக்கத் துறை விசாரணை: இந்த நிலையில், கேஜ்ரிவால் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். சட்டப்பேரவையில் அவர் தாக்கல் செய்துள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில், அவர் தற்போது அமலாக்கத் துறை மனு மீதான விசாரணையில் காணொலி காட்சி மூலம் ஆஜராகியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x