Published : 28 Aug 2014 08:10 AM
Last Updated : 28 Aug 2014 08:10 AM
வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு இருக்கும் வகையில் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடங்கி வைக்கிறார்.
’பிரதான் மந்திரி ஜன் தன் யோஜ்னா’என்ற பெயரிலான இந்த திட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உடனடியாக ஒரு கோடி வங்கிக் கணக் குகள் தொடங்கப்படுகின்றன. இதற்காக நாட்டின் அனைத்து வங்கிகளும் மும்முரமாக பணியாற்றி உள்ளன.
ஏழை மற்றும் பின் தங்கிய மக்கள், அரசுநலத்திட்டங்கள் மூலம் பயன்பெறும் வகையில், 15 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்க திட்டமிடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள காப்பீடு, டெபிட் கார்டு, மிகைப்பற்று வசதி உட்பட பல்வேறு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகக் கூறப்படும் இத்திட்டத்தை மோடி தொடங்கி வைக்க இருக்கிறார்.
இது குறித்து தி இந்துவிடம் தேசிய வங்கி அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், ‘கடந்த 16-ம் தேதி நிதித்துறை சார்பில் நாட்டின் அனைத்து வங்கிகளின் தலைமையகங்களுக்கு ஒரு சுற்றறிக்கை விடப்பட்டது. இதை ஏற்ற தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் நாடு முழுவதும் உள்ள தங்கள் கிளைகளுக்கு ஓர் உத்தரவு பிறப்பித்தன. அதன்படி, பிரதமர் இந்த திட்டத்தை தொடங்கும் போதே அதற்காக ஒரு கோடி கணக்குகளை வங்கிகளில் தொடங்கும் வகையில் பணியாற்றி உள்ளோம்.’ எனக் கூறினர்.
தமிழகத்தில் 10 லட்சம் கணக்குகள்
இதில், தமிழகத்தில் மட்டும் சுமார் பத்து லட்சம் கணக்குகள் தொடங்க இருப்பதாகவும், இதற்காக கல்லூரி மாணவர்கள், சமூக சேவகர்கள் உட்பட பலருக்கு பகுதிநேர ஊதியம் அளித்து பயன்படுத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஐக்கியமுற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ‘உங்கள் பணம் உங்கள் கையில்’ என்ற பெயரில் அரசு மானியங்களுக்காக வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இது அதற்கான மாற்றுத் திட்டம் எனக் கருதப்படுகிறது.
குடும்ப கட்டுப்பாடு விழிப்புணர்வு
ஏழை மற்றும் சமூகத்தில் பின்தங்கிய மக்களிடம் குடும்பகட்டுப் பாடு விழிப்புணர்வு இல்லாததால், குழந்தை பிறப்பு விஷயத்தில் திட்டமி டாமல் செயல்படுவதாகக் கூறப்படு கிறது. எனவே, வங்கிக்கணக்கு தொடங்க வருவோரிடம், குடும்ப கட்டுப் பாடு குறித்த விழிப்புணர்வு குறிப்புகள் அல்லது வழிகாட்டும் முறைகள் போன்றவற்றை அளித்தால் பலன் தரும் என ‘தி இந்து’வின் உங்கள் குரல் மூலம் ஒரு வாசகர் யோசனை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
கருப்பு பணம் ஒழிக்க ருபே கார்டு
‘தி இந்து’விடம் மத்திய நிதித்துறை அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், ‘டெபிட் கார்டுகளில் இரண்டு வகை களாக இருக்கும் மாஸ்டர் கார்டு மற்றும் விசா கார்டு என்பவை வெளிநாட்டு வங்கிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுபோல், இந்தியாவிற்காக இந்த திட்டத்தில் ‘ருபே கார்டை’ பிரதமர் அறிமுகப்படுத்த இருக்கிறார். இதன் மூலம், செலவு செய்யப்படும் பணம் அனைத்துக்கும் ருபே கார்டு வழியாக கணக்கில் கொண்டுவரப்பட்டு கருப்பு பணத்தை ஒழிக்க வாய்ப்பாக அமையும்’ என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT