Last Updated : 21 Aug, 2014 11:12 AM

 

Published : 21 Aug 2014 11:12 AM
Last Updated : 21 Aug 2014 11:12 AM

நித்யானந்தா வழக்கில் தாமதம் ஏன்?: உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி

நித்யானந்தா மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு இத்தனை ஆண்டுகள் நிலுவையில் நீடிப்பதற்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

நித்யானந்தா மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில், அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த பெங்களூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் ரஞ்சனா பிரகாஷ் தேசாய், என்.வி.ரமணா ஆகியோர் கொண்ட அமர்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

நித்யானந்தா தரப்பில் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் ஆஜராகி, “இந்த வழக்கு தொடரப்பட்டபோதே, நித்யானந்தா கைது செய்யப்பட்டு அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது வேண்டுமென்றே மீண்டும் ஆண்மை பரிசோதனை செய்கின்றனர். இது தனிமனித சுதந்திரத்தில் அத்துமீறும் செயல். அதுவும் இத்தனை ஆண்டுகள் கழித்து சோதனை நடத்த சட்டத்தில் இடமில்லை” என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், “அப்படி பார்த்தால், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் யாருக்கும் சோதனை நடத்த முடியாதே?” என்று கேள்வி எழுப்பினர். மேலும், நித்யானந்தா மீதான வழக்கில் 2010-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, இத்தனை ஆண்டுகளாக விசாரணைக்கு உட்படுத்தப்படாமல் வழக்கு நிலுவையில் இருப்பதற்கு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். அரசு வழக்கறிஞர்களுக்கு எதிராக தொடர்ந்து மனு தாக்கல் செய்வதற்கும் கண்டனம் தெரிவித்தனர்.

நடிகை ரஞ்சிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஆதாரமாக காட்டப்படும் சி.டி. மோசடியாக உருவாக்கப்பட்டது. அந்த குற்றச்சாட்டை ரஞ்சிதா மறுத்துள்ளார். போலீஸார் உடனே வழக்கை முடித்து வைத்திருக்க வேண்டும். ஆனால், பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து, சம்பந்தம் இல்லாத ஒருவரிடம் புகார் பெற்று வழக்கை நடத்துகின்றனர்” என்று வாதிட்டார். கர்நாடக அரசு தரப்பில் வாதத்தை தொடங்கியுள்ளனர்.

காவி உடையில் நடிகை ரஞ்சிதா

வழக்கு விசாரணையின்போது, நடிகை ரஞ்சிதா நேரில் ஆஜராகி இருந்தார். காவி சேலை உடுத்தியிருந்த அவர், நித்யானந்தா டாலர் பொருத்திய ருத்ராட்ச மாலையை கையில் வைத்திருந்தார். வழக்கறிஞர்கள் வாதம் நடந்துகொண்டிருந்தபோது, ருத்ராட்ச மாலையை உருட்டியபடியே இருந்தார். வழக்கு விசாரணை முடியும் வரை நீதிமன்றத்திலேயே இருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x