Published : 07 Feb 2024 05:01 AM
Last Updated : 07 Feb 2024 05:01 AM

‘எம்.பி., அமைச்சராக இருக்க எல்.முருகனுக்கு தகுதி இல்லை’ - மக்களவையில் டி.ஆர்.பாலு விமர்சனம்: தலித் சமூகத்தை அவமதித்ததாக பாஜக குற்றம்சாட்டியதால் அமளி

புதுடெல்லி: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், எம்.பி.யாக இருக்கவோ, அமைச்சராக இருக்கவோ தகுதியற்றவர் என்று திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., மக்களவையில் கடுமையாக விமர்சித்தார். இதன்மூலம் ஒட்டுமொத்த தலித் சமூகத்தையும் டி.ஆர்.பாலு அவமதித்திருப்பதாக பாஜக குற்றம்சாட்டியதால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்: ஆ.ராசா (திமுக): தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.

உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய்: மாநில பேரிடர் நிவாரண நிதி தொகுப்பில் உள்ள ரூ.2,013 கோடியை மாநில அரசு பயன்படுத்தியுள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதி தொகுப்புக்கு மத்திய அரசு முன்கூட்டியே நிதி ஒதுக்கியது.

டி.ஆர்.பாலு (திமுக): தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்துக்கு நிதி ஒதுக்காதது ஏன்?

(அப்போது, தமிழகத்தை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எழுந்து பேச முயன்றதால், டி.ஆர்.பாலு கோபமடைந்தார்.)

டி.ஆர்.பாலு: என்ன சொல்ல வருகிறீர்கள். நான் பேசும்போது ஏன்குறுக்கிடுகிறீர்கள். பேசாமல் உட்காருங்கள். உங்களுக்கு என்ன வேண்டும். எம்.பி.யாக இருக்கவோ, அமைச்சராக இருக்கவோ உங்களுக்கு (எல்.முருகன்)தகுதி இல்லை.

(இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளும் பாஜக உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பினர்.)

சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்: எங்களது அமைச்சர் தகுதிஅற்றவர் என்று நீங்கள் எப்படி கூறமுடியும். நீங்கள் பேசியதற்கு மன்னிப்பு கோர வேண்டும்.

நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி: அமைச்சர் எல்.முருகன் தகுதியற்றவர் என்று நீங்கள் எப்படி கூறலாம். திமுக அரசு தகுதியற்ற அரசு. காங்கிரஸ் கட்சி தகுதியற்றது. ஒரு தலித் அமைச்சரை தகுதியற்றவர் என்று டி.ஆர்.பாலு குற்றம்சாட்டி உள்ளார். இதன்மூலம் ஒட்டுமொத்த தலித் சமூகத்தையும் அவர் அவமதித்துள்ளார். இவ்வாறு வாதம் நடந்தது.

திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு: இதைத் தொடர்ந்து, டி.ஆர்.பாலுவுக்கு ஆதரவாக திமுக உறுப்பினர்களும், எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்களும் உரக்க குரல் எழுப்பினர். இரு தரப்பினர் இடையே காரசாரமான வாக்குவாதம் நடந்ததால், அமளி ஏற்பட்டது. இதன்பின்னர், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மக்களவையில் அமைச்சர் எல்.முருகன் குறித்து டி.ஆர்.பாலு கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இதையடுத்து, டி.ஆர்.பாலுவின் சர்ச்சைக்குரிய கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.

‘அநாகரிகம் அல்ல’ என விளக்கம்: பின்னர், செய்தியாளர்களிடம் டி.ஆர்.பாலு கூறியதாவது:

வெள்ள நிவாரண நிதி தொடர்பான கேள்விக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்தான் பதில் அளிக்க வேண்டும். சம்பந்தம் இல்லாத அமைச்சரான எல்.முருகன் எழுந்து பதில் கூறினார்.

தமிழகத்துக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று நாங்கள் கோரியபோது, எங்கள் பேச்சுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் முருகன் செயல்பட்டார். தமிழகத்தை சேர்ந்த அவர், தமிழக நலனுக்கு எதிராக பேசினார். அதனால், சொந்த மாநிலத்துக்கு துரோகம் செய்கிறார் என்று குற்றம்சாட்டினோம். மேலும், ‘தகுதியற்றவர்’ என்ற வார்த்தை அநாகரிமானது அல்ல.

தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது, ஓரவஞ்சனையாக நடத்துகிறது. இதை கண்டித்து பிப்ரவரி 8-ம்தேதி (நாளை) நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு திமுக எம்.பி.க்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

எல்.முருகன் கருத்து - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது:

தமிழகத்தின் வெள்ள பாதிப்புகள் குறித்து திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு தவறான தகவல்களை மக்களவையில் கூறினார். இதன்காரணமாகவே அவையில் நான் குறுக்கிட்டேன்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த என்னை தகுதியற்றவர் என்றுகூறியதன் மூலம் திமுகவின் நிலைப்பாட்டை உணர முடிகிறது. சமூக நீதியில் திமுகவுக்கு நம்பிக்கை இல்லை. தாழ்த்தப்பட்டவர்கள் எம்.பி.ஆவதை திமுக விரும்பவில்லை என்பதையே டி.ஆர்.பாலுவின் பேச்சு காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x