Published : 31 Jan 2024 01:18 PM
Last Updated : 31 Jan 2024 01:18 PM

“பல நூற்றாண்டு கனவு நிறைவேறியது” - ராமர் கோயில் குறித்து நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் கருத்து

புதுடெல்லி: “அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது” என்று நாடாளுமன்ற கூட்டுக்குழு உரையில் குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. சற்றுமுன் நிகழ்த்தப்பட்ட இந்த உரையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அயோத்தியில் புதிதாக திறக்கப்பட்ட ராமர் கோயில், முத்தலாக் மற்றும் காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது குறித்தும் பேசினார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது உரையில், “பல நூற்றாண்டுகளாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். அந்தக் கனவு இப்போது நிறைவேறியுள்ளது. மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது. அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு பால ராமர் சிலையை 5 நாட்களில் 13 லட்சம் பேர் தரிசித்துள்ளனர்.

அதேபோல் ஜம்மு காஷ்மீரில் இருந்து 370வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்பினர். இப்போது, சட்டப்பிரிவு 370 என்பதும் வரலாறாக மாறிவிட்டது. மேலும், இந்தப் நாடாளுமன்றம் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக கடுமையான சட்டத்தை இயற்றியுள்ளது.” என்று பேசினார்.

முன்னதாக, அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டதை பாஜக அரசியல் ரீதியாக பயன்படுத்தும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில் குடியரசுத் தலைவர் தனது (அரசின்) உரையில் ராமர் கோயில் திறப்பு குறித்து பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x