Published : 29 Jan 2024 06:15 AM
Last Updated : 29 Jan 2024 06:15 AM

வானிலை ஆய்வுக்காக ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் பிப்ரவரியில் விண்ணில் பாய்கிறது

சென்னை: வானிலை ஆய்வுக்கான இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள், அடுத்தமாதம் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

நம் நாட்டுக்கு முக்கிய தேவையான தொலைத்தொடர்பு, தொலைஉணர்வு, வழிகாட்டுதல் செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. விண்வெளி ஆராய்ச்சியிலும் பல்வேறு சாதனைகளை செய்துவருகிறது. இதற்கிடையே, உலகளாவிய பருவநிலை மாற்றம் தற்போது பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது. புயல், கனமழை போன்றஇயற்கை சீற்றங்களின் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

இதை கருத்தில் கொண்டு, வானிலை மாறுபாடுகளை கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக இஸ்ரோ சார்பில் இன்சாட் வகை செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், வானிலை ஆய்வுக்கான அதிநவீன இன்சாட்-3டிஎஸ் எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இது ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்துஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் பிப்ரவரியில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதுதொடர்பான இறுதிகட்ட சோதனைகள் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ ஆய்வு மையத்தில் கடந்த 27-ம் தேதிவெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து, ஹரிகோட்டாவுக்கு செயற்கைக் கோள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்துக்கு சொந்தமான இன்சாட்-3டிஎஸ் மொத்தம் 2,275 கிலோ எடை கொண்டது. இதில் 6 சேனல் இமேஜர் உட்பட 25 விதமானஆய்வு கருவிகள் உள்ளன இவைஅனைத்தும் பூமியின் பருவநிலைமாறுபாடுகளை உன்னிப்பாக கண்காணித்து வானிலை தொடர்பானநிகழ்நேர தகவல்களை துல்லியமாக வழங்கும். இதன்மூலம் புயல், கனமழை போன்ற இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே அறிந்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலும். ஏற்கெனவே விண்ணில் செயல்பாட்டில் உள்ள இன்சாட்-3டி, இன்சாட்-3டிஆர் செயற்கைக் கோள்களின் தொடர்ச்சியாகவே இன்சாட்-3டிஎஸ் செலுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x