Published : 27 Jan 2024 05:10 PM
Last Updated : 27 Jan 2024 05:10 PM

கேரள ஆளுநருக்கு Z+ பாதுகாப்பு - இடதுசாரி மாணவ அமைப்பினருடனான மோதலைத் தொடர்ந்து மத்திய அரசு நடவடிக்கை

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்

புதுடெல்லி: சிபிஎம் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எஃப்ஐ (SFI) உடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், ராஜ்பவனுக்கும் Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. ஆளுநர் ஆரிப் கான் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎம் கட்சியின் எஸ்எப்ஐ (SFI) அமைப்பினர் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு நிதியுதவி பெறும் பல்கலைக்கழகங்களில் சங்பரிவார் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளை நியமிப்பதாக குற்றம்சாட்டி எஸ்எஃப்ஐ மாணவர் அமைப்பு கேரள ஆளுநருக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, இன்றும் ஆளுநர் செல்லும் வழியில் கருப்புக்கொடி காண்பிக்கும் போராட்டத்தை அந்த அமைப்பினர் முன்னெடுத்தனர். மாநிலத் தலைநகரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள கொல்லம் நில்லமேலியில் ஆளுநரின் வாகனம் சென்று கொண்டிருந்த போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்எஃப்ஐ அமைப்பினர் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமும் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து ஆளுநர் ஆரிப் முகமது கான் உடனடியாக தனது கான்வாய் வாகனங்களை நிறுத்தச் சொல்லி காரில் இருந்து இறங்கி மாணவர்களுக்கு எதிராக முழக்கமிட்டு அவர்களை அப்புறப்படுத்தச் சொல்லி காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

எனினும், தொடர்ந்து மாணவர்கள் ஆளுநருக்கு எதிராக ‘சங்கி ஆளுநர் கோ பேக்’ என்பது போன்ற முழக்கங்களை எழுப்பியதுடன் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனால், ஆளுநர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். “போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்வரை இடத்தை காலி செய்ய மாட்டேன்” எனக் கூறி சாலையில் நாற்காலி போட்டு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு தொற்றிகொண்டது. அதனைத் தொடர்ந்து மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்த 12 பேரை கைது செய்ததாக காவல்துறை கூறியும் போராட்டத்தை கைவிட ஆளுநர் மறுத்துவிட்டார்.

“50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர். மற்ற மாணவர்களை ஏன் கைது செய்யவில்லை” என்று கூறி போராட்டத்தை கைவிட ஆளுநர் மறுப்பு தெரிவித்தார். மாணவர்கள் மீது போடப்பட்ட எப்ஐஆர் விவரங்களை காண்பிக்க வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார். கடந்த டிசம்பர் மாதமும் இதேபோல் SFI அமைப்பினர் போராடியபோது கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் சாலையில் இறங்கி எதிர்ப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x