Published : 27 Jan 2024 11:19 AM
Last Updated : 27 Jan 2024 11:19 AM

மகாராஷ்டிரா | மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கைகள் ஏற்பு; உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டார் மனோஜ் ஜராங்கே

மனோஜ் ஜராங்கே பாட்டீல்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பான அனைத்துக் கோரிக்கைகளையும் மாநில அரசு ஏற்றுக் கொண்டதால் சமூக நல செயற்பாட்டாளர் மனோஜ் ஜராங்கே பாட்டீல் தனது உண்ணாவிரத போராட்டத்தை இன்று (சனிக்கிழமை) முடித்துக் கொள்வதாக அறிவித்தார். மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மனோஜ் பாட்டீலை சந்தித்து பழச்சாறு கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்தார்.

மராத்தா சமூகத்தினரை சமூக, கல்வி ரீதியாக பின் தங்கிய வகுப்பினராக (Socially and Educationally Backward - SEBC) அறிவித்து அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இட ஒதுக்கீடு தரக்கோரி மனோஜ் ஜராங்கே மும்பையில் வெள்ளிக்கிழமை காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி இருந்தார். அனைத்து மராத்தியர்களுக்கும் குன்பி சான்றிதழ் வழங்க வேண்டும், மழலையர் பள்ளி முதல் முதுநிலை படிப்பு வரை இலவச கல்வி, அரசு வேலை வாய்ப்புகளில் மராத்தியர்களுக்கு இட ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை மனோஜ் பாட்டீல் வலியுறுத்தி வந்தார். குன்பி என்பது, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு (ஓபிசி)-ஐக் குறிக்கும்.

முன்னதாக, தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் மும்பையின் ஆசாத் மைதானத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்று மனோஜ் பாட்டீல் எச்சரிக்கை விடுத்திருந்தார். அவர் கூறுகையில், “அரசு எங்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், எங்களால் என்னை செய்ய முடியும் என்று நாங்கள் அரசுக்கு காட்டுவோம்” என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே வெள்ளிக்கிழமை இரவு மாநில அமைச்சர்கள் இருவர் பாட்டீலை சந்தித்து அவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தாக மனோஜ் பாட்டீல் தரப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இன்று காலையில் மனோஜ் பாட்டீலை சந்தித்து பழச்சாறு கொடுத்து அவரது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்தார். இந்தநிலையில் மனோஜ் பாட்டீல் இன்று வெற்றி பேரணி நடத்துவார், இப்பேரணி வாஷியில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் மராத்திய சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு விவகாரம், அந்தச் சமூகத்தினருக்கும் மாநில அரசுக்கும் இடையிலான முக்கிய பிரச்சினையாகஉருவெடுத்தது. முன்னதாக, கடந்த 2021 ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி, கல்லூரி, உயர் கல்வி நிறுவனங்கள், வேலை வாய்ப்புகளில் மராத்திய சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் போது, 50 சதவீத இடஒக்கீட்டை மீறுவதற்கான நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், மராத்தா இடஒதுக்கீட்டை ரத்து செய்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x