Published : 25 Jan 2024 07:08 AM
Last Updated : 25 Jan 2024 07:08 AM

“ஒருபோதும் உங்கள் மிரட்டலுக்கு பணிய மாட்டேன்” - அசாம் முதல்வருக்கு ராகுல் காந்தி சவால்

பர்பெட்டா: என் மீது எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் பதிவு செய்யுங்கள். ஆனால், இத்தகைய மிரட்டல்கள் வழியாக என்னை பணிய வைக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அசாம் மாநில முதல்வருக்கு சவால் விட்டுள்ளார்.

கடந்த 14-ம் தேதி வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் தவுபல் நகரில் இருந்து பாரத ஒற்றுமை நியாய யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். கடந்த செவ்வாய்க்கிழமை அசாமின் குவாஹாட்டி நகருக்கு அவர் பாத யாத்திரையாக சென்றார். 5,000-க்கும்மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்களும் அவருடன் சென்றனர்.

அப்போது குவாஹாட்டி நகருக்குள் ராகுல் காந்தி நுழைய அசாம் போலீஸார் அனுமதி வழங்கவில்லை. இதன் காரணமாக போலீஸாருக்கும் காங்கிரஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீஸார் அமைத்திருந்த தடுப்புகளை காங்கிரஸார் அகற்றினர்.

இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்ய அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உத்தரவிட்டார். ராகுல் காந்தி உட்பட முக்கிய தலைவர்கள் மீது அசாம் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்நிலையில் அசாம் மாநிலம்பர்பெட்டா மாவட்டத்தில் நேற்றைய நடைபயணத்தின்போது ராகுல் காந்தி பேசுகையில் “இன்னும் 25 வழக்குகள் வேண்டுமானாலும் பதிந்துகொள்ளுங்கள். ஆனால், இத்தகைய மிரட்டல்கள் வழியாக பாஜக – ஆர்எஸ்எஸ் ஒருபோதும் என்னை பணிய வைக்க முடியாது. மிகவும் ஊழல் மிக்க முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா. அவர் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கையிலேயே உங்கள் நிலத்தை அபகரித்திருப்பார். நீங்கள் காண்டாமிருகங்களை பார்க்க காசிரங்கா தேசிய பூங்காவுக்கு போகும்போது, அங்கும்முதல்வருக்கு நிலம் இருப்பதைப் பார்க்கலாம். நீங்கள் எப்போதுதொலைக்காட்சியை பார்த்தாலும் அதில் ஹிமந்தா பிஸ்வாதான் தோன்றுவார். அவர் விருப்பப்படியே ஊடகங்கள் செயல்பட முடியும்” என்று விமர்சித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x