Published : 23 Jan 2024 07:52 AM
Last Updated : 23 Jan 2024 07:52 AM

பாரதத்தின் புதிய வரலாறு ‘ராமராஜ்ஜியம்’

ராம ராஜ்யம் தொடங்கிவிட்டது: ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் திங்கள்கிழமை கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படுவதன் மூலம் ராம ராஜ்யம் தொடங்கும். மேலும் அனைத்து விதமான ஏற்றத்தாழ்வுகளும் முடிவுக்கு வரும். அனைவரும் அன்புடன் பழகுவார்கள். அயோத்தியிலிருந்து தொடங்கும் இந்த மாற்றம் நாடு முழுவதும் பரவும். இனி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வார்கள். நல்லெண்ணத்துடன் நாம் அனைவரும் வாழ்வோம். ராமபிரானின் அருள் அனைவருக்கும் கிடைக்கும்.

எல்லாம் நன்றாகத்தான் நடக்கிறது. ராம பக்தர்களின் விருப்பம் இன்று (நேற்று) நிறைவேறுகிறது. குழந்தை ராமர் கருவறையில் அமர்ந்தவுடன் நம்முடைய எல்லா கஷ்டங்களும் முடிவுக்கு வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

32 ஆண்டுகளுக்கு பிறகு ராமர் கோயிலுக்கு முன் உமா பாரதி: பாஜக மூத்த தலைவர் உமா பாரதி, 32 ஆண்டுகள் மற்றும் 46 நாட்களுக்கு பிறகு நேற்று அயோத்தி வந்திருந்தார். கடைசியாக 1992 டிசம்பர்6-ல் கரசேவகர்களால் பாபர் மசூதிஇடிக்கப்பட்ட நாளில் அவர் அயோத்தியில் இருந்தார். குழந்தை ராமர் பிறந்த இடமாகலட்சக் கணக்கான இந்துக்களால் நம்பப்படும் இடத்தில் இன்று பிரம்மாண்ட ராமர் கோயில் எழுந்துள்ளது.

பாஜகவின் ஆவேசப் பேச்சாளரான உமா பாரதி, 1990-களின் ராமர் கோயில் இயக்கத்தில் முன்னணியில் இருந்தார். ராமர் கோயில் இயக்கத்தின் மற்றொரு பிரபல பெண் தலைவரான சாத்வி ரிதம்பராவுடன் அவர் விழாவில் காணப்பட்டார். பிரான் பிரதிஷ்டா சடங்குகளுக்காக பிரம்மாண்ட கோயிலின் படிக்கட்டுகளில் பிரதமர் மோடி ஏறுவதற்குசற்று முன்பாக உமா பாரதி, எக்ஸ் சமூக வலைதளத்தில், “அயோத்தியில் ராமர் கோயிலுக்கு முன் இருக்கிறேன். குழந்தை ராமருக்காக காத்திருக்கிறேன்” என்று தனது புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.

1992, டிசம்பர் 6-ல் அயோத்தியில் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியுடன் உமா பாரதி சிரித்த முகத்துடன் காணப்படும் ஒரு தருணம்இன்றும் ஒரு புகைப்பட ஆவணமாக திகழ்கிறது. தற்போது 90 வயதாகும் முரளி மனோகர் ஜோஷி, ராமர் கோயில் விழாவில் பங்கேற்கவில்லை. ராம ஜென்மபூமி இயக்கத்தின் தளகர்த்தரான எல்.கே.அத்வானியும் மோசமான காலநிலையை சுட்டிக்காட்டி விழாவில் பங்கேற்கவில்லை.

ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு கடந்த வாரம் வாழ்த்து தெரிவித்த அத்வானி, “கோயில் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடியை ராமர் தேர்வுசெய்துள்ளார்” என்று குறிப்பிட்டிருந்தார். அத்வானி, ஜோஷி போன்ற மூத்ததலைவர்கள் பங்கேற்காத நிலையில்1990-களின் ராமர் கோயில் இயக்கத்தைச் சேர்ந்த சில தலைவர்கள் விழாவில் கலந்துகொண்டனர். இவர்களில் உமா பாரதியும் ஒருவர்.

மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐயால்குற்றம் சாட்டப்பட்ட பாஜக மற்றும் சங்பரிவார் தலைவர்களில் உமா பாரதி, ரிதம்பரா ஆகியோரும் அடங்குவர்.இவர்கள் அத்வானி, ஜோஷி மற்றும் பிறருடன் 2020-ல் சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். முதுமை காரணமாக மூத்த தலைவர்கள் விழாவில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என ராமர் கோயில்அறக்கட்டளை அண்மையில் கூறியதால் அரசியல் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து உமா பாரதி சாத்வி ரிதம்பரா உள்ளிட்டோர் விழாவுக்கு அழைக்கப்பட்டனர்.

நிகழ்வில் பங்கேற்றது சிலிர்ப்பான அனுபவம்: ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்றது சிலிர்ப்பான அனுபவம் என்று ஈஸ்மை டிரிப் இணை நிறுவனர் உணர்ச்சிகரமாக தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஸ்ரீராம ஜென்மபூமி கோயில் திறப்பு நிகழ்வில் அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், தொழில்முனைவோர்கள், விளையாட்டு பிரபலங்கள் , இசைக்கலைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர். அவர்களுடன் ஈஸ்மை டிரிப் இணை நிறுவனர் நிஷாந்த் பிட்டியும் (37) பாரம்பரிய உடைகளை அணிந்து இந்த புனிதமான நிகழ்சியில் பங்கேற்றார்.

அப்போது அவர் கூறுகையில், “ஒவ்வொரு இந்தியருக்கும் இது வரலாற்று தருணம். நாங்கள் இந்த இடத்துக்கு வந்தவுடன் மெய் சிலிர்க்கும் அனுபவத்தை உணர்ந்தோம். ஒற்றுமை கொண்டாட்டத்தின் இந்த உணர்வு லட்சக்கணக்கான இந்தியர்களின் இதயங்களில் எதிரொலிக்கிறது. ராமர் நமது வாழ்க்கையை மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்புடன் நிரப்பட்டும் என்றார்.

சோஹோ தலைமைச் செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தனது குடும்பத்தாருடன் அயோத்தி கோயில் திறப்பு விழாவில் பங்கேற்றார். அப்போது அவர், தனது தாயார் ஸ்ரீராமரின் வாழ்நாள் பக்தை என்று பெருமையுடன் தெரிவித்தார்.

கங்கை மகா ஆரத்தி: ராமர் சிலை பிரதிஷ்டையின்போது வாராணசியிலுள்ள தசாஅஸ்வமேத படித்துறையில் கங்கை மகா ஆரத்தி பூஜை மிகச்சிறப்பாக நடைபெற்றது.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை நேற்று பகலில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக வாராணசியிலுள்ள தசாஅஸ்வமதே படித்துறையில் கங்கை மகா ஆரத்தி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படித்துறையில் 2 மிகப்பெரிய எல்சிடி டி.வி. திரைகள் வைக்கப்பட்டு பிராணப் பிரதிஷ்டை விழாவை பக்தர்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்ுறு கோயில் மக்கள் தொடர்பு அதிகாரி பியூஷ் திவாரி தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து மாலை நேரத்தில் தசாஅஸ்வமேத படித்துறையில் கங்கை மகா ஆரத்தி பூஜை மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இந்த ஆரத்தி பூஜையைக் கண்டு மெய்மறந்தனர். மேலும் வாராணசியிலுள்ள வீடுகளில் நேற்று இரவு அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு நகரே ஜோதிமயமாகக் காட்சியளித்தது.

இதுகுறித்து பதுக் பைரவர் கோயிலின் மகந்த் ஜிதேந்திர மோகன் புரி கூறும்போது, “வழக்கமாக கங்கை ஆரத்தியில் 7 அர்ச்சகர்கள் பங்கேற்று பூஜை செய்வர். இன்று சிறப்பு நாளானதால் 9 அர்ச்சகர்கள் பங்கேற்று மகா ஆரத்தி பூஜை செய்தனர். இதைத் தொடர்ந்து படித்துறையில் ராமர் பஜனைப் பாடல்கள் நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டன. பின்னர் தீபோத்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன’’ என்றார்.

ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவி வழிபாடு: உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டையின் போது இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் மூலம் கோயில் மீது மலர் தூவப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

குழந்தை ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவின் முக்கிய நிகழ்வான குழந்தை ராமர் சிலையின் பிரதிஷ்டை நேற்று நண்பகல் 12.29.08 வினாடிக்கு 121 வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க நடைபெற்றது. 84 வினாடிகளில் 51 அங்குலம் உயரம் கொண்ட குழந்தை ராமர் சிலை அயோத்தி கோயில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிலை பிரதிஷ்டைக்கான பூஜையில் பிரதமர் மோடியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உ.பி. முதல்வர் ஆதித்யநாத் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.

இந்த நிகழ்வின் போது அயோத்தி கோயில் மற்றும் அங்கு குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர்கள் மூலம் பூக்கள் தூவப்பட்டது.4.25 அடி உயரம் கொண்ட இந்த குழந்தை ராமர் சிலையின் அகலம் 3 அடியாகும். மொத்த எடை 1.5 டன். மூலவர் சிலை ராமரின் வயது 5.

மூலவரின் தோற்றம் பரந்த நெற்றி, வசீகரமான கண்கள், நீண்ட கைகளைக் கொண்டிருக்கிறது. சிலை வடிவமைக்கப்பட்ட கல்லானது, கர்நாடக மாநிலத்தின் கருப்பு பாறைகளிலிருந்து செதுக்கப்பட்டது. சிலையின் அடித்தளமானது தாமரையில் ராமர் நிற்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ராமர் சிலையைச் சுற்றியுள்ள பிரபையில், தசாவதாரம், ஸ்வஸ்திக் சின்னத்துடன் ஓம், சுதர்சன சக்கரம், கதாயுதம், சூரியன், சந்திரன் ஆகியவை அமைந்துள்ளன.

சிற்பி மகிழ்ச்சி: குழந்தை ராமர் சிலையை செதுக்கிய சிற்பியின் பெயர் அருண் யோகிராஜ். இவர் கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்தவர். சிற்பக் கலையில் தேர்ச்சி பெற்ற இவர் எம்பிஏ படித்துள்ளார். டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள சுபாஷ் சந்திரபோஸின் 30 அடி சிலையை இவர்தான் வடித்துள்ளார். அந்த சிலை பிரதமர் மோடிக்கு மிகவும் பிடித்ததால், அதே சிலையை சிறிய அளவில் செதுக்கி மோடிக்கு பரிசாக வழங்கினார். இதன் மூலமாக அயோத்தி ராமர் கோயில் நிர்வாகம், இவரிடம் குழந்தை ராமர் சிலையை செதுக்குமாறு கோரியது. அதன்பேரில் 51 அங்குல உயரத்தில் அந்த சிலையை உருவாக்கினார்.

தற்போது சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது குறித்து சிற்பி அருண் யோகிராஜ் கூறுகையில், '' குழந்தை ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் உள்ள‌னர். எங்களது குடும்பம் 5 தலைமுறைகளாக சிலை செதுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளது.

நான் எம்பிஏ படித்துவிட்டு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன். சிற்பக் கலை மீதான ஆர்வத்தால் பணியில் இருந்து விலகி, இந்த தொழிலுக்கு வந்தேன். எனது சிலை தேர்வு செய்யப்பட்டுள்ளதால் இந்த பூமியிலே மிகப்பெரிய அதிர்ஷ்டசாலியாக என்னை உணர்கிறேன். ராமரின் அருளின் காரணமாகவே என்னால் அந்த சிலையை அற்புதமாக செதுக்க முடிந்தது. இதை மிகப்பெரிய புண்ணியமாக கருதுகிறேன். இதனால் எனக்கும் எனது முன்னோர், சந்ததியினருக்கு கடவுளின் ஆசி எப்போதும் கிடைக்கிறது என்பது மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அருண் யோகிராஜ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x