Published : 13 Jan 2024 05:15 PM
Last Updated : 13 Jan 2024 05:15 PM

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நாளில் சில மாநிலங்களில் மது, இறைச்சி விற்பனைக்குத் தடை

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22-ம் தேதி மதியம் 12:20 மணிக்கு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் சில மாநிலங்களில் மது, இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநில கலால் துறை, ஜனவரி 22-ம் தேதி மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது என்று அனைத்து மதுபான கடைகளுக்கும் அறிவுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "ராமர் பிறந்த இடமான அயோத்தியில் கட்டப்பட்டுள்ள கோயிலில் ஜன.22-ம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதை நீங்கள் அறிவீர்கள். அதனை முன்னிட்டு, ஜன.11-ம் தேதி அரசு பிறப்பித்துள்ள உத்தரவின் அடிப்படையில், ஜன.22-ம் தேதி மாநிலத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அரசின் முடிவுக்கு இணங்குவதை உறுதி செய்யவும்" என்று உத்தரப் பிரதேச கலால் ஆணையர் தெரிவித்துள்ளார்.

அசாம்: ஜனவரி 22-ம் தேதி மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு தடைவிதித்து அசாம் முதல்வர் ஹேமந்த பிஸ்வா சர்மா உத்தரவிட்டுள்ளார். இது குறித்த தனது எக்ஸ் பதிவொன்றில் அவர் கூறியது: "இன்று நடந்த அசாம் அமைச்சரவைக் கூட்டத்தில், வரும் ஜன.22-ம் தேதி நடைபெற இருக்கும் ஸ்ரீராம் லல்லா விரஜ்மான் பிரதிஷ்டையை முன்னிட்டு அன்று மாநிலத்தில் மது விற்பனைக்கு தடைவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், பெண் தொழில்முனைவோருக்கு நிதியுதவி அளிக்கும் புதிய திட்டமான முக்கிய மந்திரி மகிளா உதியமிதா அபிநயா திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு பகுதிகளில் பெரிய திரைகள் நிறுவப்படும். ஜன.21, 22 ஆகிய தேதிகளில் பாஜக தொண்டர்கள் சந்தைகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் விளக்கேற்றுவார்கள். ஜன.22-ம் தேதி மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

உத்தராகண்ட்: உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் தாமி, ஜன.22-ம் தேதி மாநிலத்தில் மது விற்பனைக்கு தடைவிதிக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் பொதுப் பங்களிப்பின் மூலம் பின்தங்கியவர்களுக்கும் பிரசாதம் கிடைக்க வழிசெய்யும் வகையில் ஜன.22-ம் தேதி அனைத்து பெரிய கோயில்கள் மற்றும் குருத்வார்களில் பிரசாதம் வழங்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அந்தப் பிரசாதங்களில் உத்தராகண்டின் சிறுதானியங்கள் சேர்க்கப்படுவது ஊக்குவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர்: ஜன.22-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலமும் மது விற்பனைக்கு தடைவிதிக்க முடிவு செய்துள்ளது. இதன்படி அரசின் இந்த முடிவினை கட்டாயம் நடைமுறைப்படுத்தும் படி மாநில கலால் துறை அறிவுறுத்தியுள்ளது. அதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், "சத்தீஸ்கர் மாநில கலால் சட்டம் 1915, பிரிவு 24, துணை பிரிவு (1) படி அனைத்து நாட்டு மதுபானம், வெளிநாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், ரெஸ்டாரண்ட் பார்கள், ஹோட்டல் பார்கள், மாநிலத்தில் இருக்கும் அனைத்து கிளப்களும் ஜன.22-ம் தேதி மூட உத்தரவிடப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுப்பதற்காக சந்தேகமான இடங்கள் மற்றும் வாகனங்களைக் கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்படும். அனைத்து மாவட்ட அலுவலர்கள், வட்டார மற்றும் மாநில அளவிலான பறக்கும் படையினருடன் இணைந்து சட்டவிரோத மது விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x