Published : 13 Jan 2024 06:34 AM
Last Updated : 13 Jan 2024 06:34 AM

நாடாளுமன்ற கூட்டத் தொடர் 31-ம் தேதி தொடங்குகிறது: பிப். 1-ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

ஓராண்டில் நாடாளுமன்றம் 3 முறை கூடுகிறது. ஆண்டின் தொடக்கத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர், ஜூலையில் மழைக்கால கூட்டத்தொடர், நவம்பரில் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறுகின்றன. வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர்பிரகலாத் ஜோஷி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

17-வது மக்களவையின் கடைசி கூட்டத் தொடரான இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர்ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரின் முதல்நாளில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுவார். பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார். பிப்ரவரி 9-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும். இவ்வாறு பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

இடைக்கால பட்ஜெட் என்பதால் மிகப்பெரிய அறிவிப்புகள் இருக்காது. எனினும் இந்த பட்ஜெட்டில் பெண்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக பெண் விவசாயிகளுக்கான நிதியுதவி ரூ.6,000-ல்இருந்து ரூ.12,000 ஆக உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது.

ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் தற்போது ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. இந்தகாப்பீட்டுத் தொகை உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் எவ்வித மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x