“அயோத்தியில் கோயில் கட்ட பிரதமர் மோடியை பகவான் ராமர் தேர்வு செய்தார்” - அத்வானி

“அயோத்தியில் கோயில் கட்ட பிரதமர் மோடியை பகவான் ராமர் தேர்வு செய்தார்” - அத்வானி

Published on

புது டெல்லி: அயோத்தியில் தனக்கு பிரம்மாண்ட கோயில் கட்ட பிரதமர் மோடியை பகவான் ராமர் தேர்வு செய்தார் என பாஜக-வின் இணை நிறுவனர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அத்வானி தெரிவித்துள்ளார்.

“கடந்த 1990 செப்டம்பர், 25-ம் தேதி குஜராத்தின் சோம்நாத் பகுதியில் இருந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு ராம ரத யாத்திரை மேற்கொண்டோம். அதில் பிரதமர் மோடியும் பங்கேற்றார். அப்போது அவர் இன்று இருப்பது போல பிரபலமானவர் அல்ல. ஆனால், அப்போதே அயோத்தியில் தனக்கு பிரம்மாண்ட கோயில் கட்ட மோடியை பகவான் ராமர் தேர்வு செய்துள்ளார். அதுதான் இப்போது செயல் வடிவம் கண்டுள்ளது.

அந்த யாத்திரையின் போது அரங்கேறிய சம்பவங்கள் எனக்குள் மாற்றத்தை தந்தது. எங்களது ரதம் செல்லும் இடமெல்லாம் யாரென தெரியாத கிராம மக்கள் எங்களுக்கு அதீத வரவேற்பு கொடுத்தனர். அது பகவான் ராமருக்கு கோயில் வேண்டுமென மக்கள் விரும்பியதன் வெளிப்பாடு. வரும் 22-ம் தேதி ராம கோயிலில் கவுரவம் மட்டுமல்லது மக்களின் நம்பிக்கையும் மீட்டமைக்கப்பட உள்ளது” என அத்வானி தெரிவித்துள்ளார். ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்வில் அத்வானி பங்கேற்க உள்ளார்.

அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் நிர்வாகக் குழு மேற்கொண்டு வருகிறது. இதில் பிரதமர் மோடி, அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள், சாதுக்கள் மற்றும் பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்க உள்ளனர். அதற்கு தகுந்த வகையில் அயோத்தி நகரத்தில் உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in