Published : 11 Jan 2024 05:13 PM
Last Updated : 11 Jan 2024 05:13 PM

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை தவிர்க்கும் காங்கிரஸ் - முரண்படும் கட்சி பிரமுகர்கள் சிலரின் குரல்கள்

அயோத்தி ராமர் கோயில் தூண்கள்

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டோம் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் சிலர் தங்களது கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிரான முடிவை எடுத்துள்ளனர்.

இமாச்சலப் பிரதேச பொதுப்பணித் துறை அமைச்சரும், முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகனுமான விக்ரமாதித்ய சிங், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கப் போவதாக ஏற்கெனவே தெரிவித்திருந்தார். “அயோத்தி ராமர் கோயில் இயக்கத்துக்கு எனது தந்தை எப்போதும் ஆதரவாக இருந்துள்ளார். எங்களைப் பொறுத்தவரை இது அரசியல் விவகாரம் கிடையாது. இது மதம் சார்ந்த விஷயம். நாங்கள் இந்துக்கள். எங்கள் மதத்தை முன்னோக்கி கொண்டு செல்வது, எங்கள் பாரம்பரியத்தின் மீது நம்பிக்கை வைப்பது ஆகியவை எங்கள் கலாச்சாரம். இந்த திசையில் நாங்கள் தொடர்ந்து பயணிப்போம்” என அவர் கூறியிருந்தார்.

விக்ரமாதித்ய சிங் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்த நிலையில், விழாவை புறக்கணிக்கும் முடிவை காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது. இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், "வரும் 22-ம் தேதி அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோயில் திறப்பு விழா அழைப்பிதழை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் கடந்த மாதம் பெற்றனர்.

நமது நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ராமரை வழிபடுகிறார்கள். மதம் என்பது தனிப்பட்ட விஷயம். ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் அயோத்தியில் கோயில் என்ற அரசியல் திட்டத்தை நீண்ட காலமாக உருவாக்கி வருகின்றன. தேர்தல் ஆதாயத்துக்காகவே முழுமையடையாத கோயிலை திறந்து வைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குக் கட்டுப்பட்டும், ராமரை வணங்கும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பை மரியாதையுடன் நிராகரித்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பது என்ற தனது நிலைப்பாட்டை விக்ரமாதித்ய சிங் மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறார். மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவரும், குஜராத் சட்டப்பேரவையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அர்ஜுன் மோத்வாடியா, “கடவுள் ராமர் மரியாதைக்குரிய தெய்வம். இது நாட்டு மக்களின் நம்பிக்கை. இதுபோன்ற அரசியல் முடிவுகளை எடுப்பதில் இருந்து காங்கிரஸ் விலகி இருக்க வேண்டும்” என தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் இருந்து நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் விலகி இருப்பது, காங்கிரஸ் இந்து விரோத கட்சி என பாஜக பிரச்சாரம் செய்ய வழிவகுக்கும். தேர்தலில் மக்களை இது பிளவுபடுத்தும் என மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர்கள் பலர், வரும் 15-ம் தேதி அயோத்திக்குச் சென்று சரயு நதியில் நீராடிவிட்டு ராமர் கோயிலுக்குச் சென்று வழிபட இருப்பதாக அறிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x