Published : 06 Jan 2024 11:49 AM
Last Updated : 06 Jan 2024 11:49 AM

தாவூத் இப்ராஹிம் சொத்தை 1,300 மடங்கு கூடுதல் தொகைக்கு ஏலம் எடுத்த வழக்கறிஞர்: என்ன காரணம்?

மும்பை: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் சொத்துக்களை 1,300 மடங்கு கூடுதல் தொகைக்கு ஏலம் எடுத்துள்ளார் வழக்கறிஞர் ஒருவர்.

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் சிறு வயதில் வாழ்ந்த ரத்னகிரியில் உள்ள வீடு உட்பட நான்கு சொத்துகள் நேற்று ஏலத்தில் விடப்பட்டன. மொத்தம் உள்ள இந்த நான்கு சொத்துகளில் இரண்டு சொத்துகள் முறையே ரூ.2.01 கோடி மற்றும் ரூ.3.28 லட்சத்துக்கு ஏலம் போனது. 170.98 சதுர மீட்டர் அளவுள்ள விவசாய நிலம் அதிகபட்சமாக ரூ.2.01 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. அதேபோன்று, 1,730 சதுர மீட்டர் அளவுள்ள மற்றொரு விவசாய நிலம் ரூ.3.28 லட்சத்துக்கு ஏலத்தில் விடப்பட்டது. இந்த இரண்டு சொத்துக்களையும் ஏலம் எடுத்தவர் அஜய் ஸ்ரீவஸ்தவா என்ற வழக்கறிஞர்.

இதே அஜய் ஸ்ரீவஸ்தவா இதற்கு முன்னும் தாவூத் இப்ராஹிம் சொத்துக்களை ஏலம் எடுத்துள்ளார். மும்பையின் நாக்பாடாவில் தாவூத் இப்ராஹிம் சொந்தமான இரண்டு கடைகளை 2001ல் ஏலம் எடுத்தவர் இந்த அஜய் ஸ்ரீவஸ்தவா. 2020ல் தாவூத்தின் பங்களா ஒன்றையும் ஏலத்தில் எடுத்துள்ளார் இவர். சிவசேனா கட்சியின் முன்னாள் உறுப்பினரான இவர் இம்முறை தாவூத் இப்ராஹிம் சொத்துக்களை ஏலம்விட்டபோது, வெறும் 15,440 ரூபாய் மதிப்புள்ள விவசாய நிலத்தை அதிகபட்சமாக ரூ.2.01 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளார். இது நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 1,300 மடங்கு அதிகம் என்று சொல்லப்படுகிறது.

இவ்வளவு தொகைக்கு ஏலம் எடுத்தது தொடர்பாக பேசிய வழக்கறிஞர் அஜய் ஸ்ரீவஸ்தவா, "நிலத்தின் சர்வே எண், மற்றும் பணத்தின் கூட்டுத் தொகை நியூமராலஜி படி எனக்கு ராசியானது. இந்த இடம் எனது பெயருக்கு மாற்றியதும் இங்கு ஒரு சனாதன பள்ளியைத் தொடங்குவேன். நான் ஒரு சனாதானி இந்து. நான் ஏற்கனவே தாவூத் இப்ராஹிமின் பங்களாவை 2020ல் ஏலம் எடுத்திருந்தேன். அங்கு சனாதன தர்மம் பாத்ஷாலா அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதை பதிவு செய்த பிறகு, அங்கும் சனாதன பள்ளியையும் தொடங்குவேன்" என்று தெரிவித்துள்ளார்.

1993-ல் நடத்தப்பட்ட மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தாவூத் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அதன்பின் இவர் இந்தியாவை விட்டு தப்பியோடி தலைமறைவாக உள்ளார். இந்த நிலையில், மும்பை ரத்னகிரியில் அவர் சிறுவயதில் வாழ்ந்த வீடு உட்பட தாவூத் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான நான்கு சொத்துகள் நேற்று ஏலத்தில் விடப்பட்டன. தெற்கு மும்பையில் உள்ள ஆயகர் பவனில் நேற்று இந்தஏலம் நடத்தப்பட்டது. கடத்தல்காரர்கள் மற்றும் அந்நியச் செலாவணி மோசடியாளர்கள் (சொத்து பறிமுதல்) சட்டத்தின் (எஸ்ஏஎப்இஎம்ஏ) கீழ் உரிய அதிகாரிகளின் முன்னிலையில் இந்த ஏலநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 2017 மற்றும் 2020-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் எஸ்ஏஎப்இஎம்ஏ சட்டத்தின் கீழ்தாவூத் இப்ராஹிமுக்கு தொடர்புடைய 17-க்கும் மேற்பட்ட சொத்துகள் ஏலத்தில் விடப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x