Published : 25 Dec 2023 08:00 PM
Last Updated : 25 Dec 2023 08:00 PM

“பிரதமர் வேட்பாளராக கார்கேவை பரிந்துரைத்ததில் எனக்கு எந்த ஏமாற்றமும் இல்லை” - நிதிஷ் குமார்

நிதிஷ் குமார்

புதுடெல்லி: “காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக பரிந்துரைத்ததில் எனக்கு எந்தவித ஏமாற்றமும் இல்லை. எங்கள் கூட்டணி ஒன்றுபட்டுள்ளது. நாங்கள் ஒற்றுமையாகப் போராடுவோம்” என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கே பரிந்துரைக்கப்பட்டது குறித்து பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாயின் பாட்னா நினைவிடத்தில் செய்தியாளர்களுக்கு பதிலளித்த நிதிஷ் குமார், "மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக பரிந்துரைத்ததில் எனக்கு எந்த ஏமாற்றமும் இல்லை, மனக் கசப்பும் இல்லை. எனக்கு எந்தப் பதவியின் மீதும் ஆசை இல்லை. எங்கள் கட்சி ஒன்றுபட்டுள்ளது. நாங்கள் ஒற்றுமையாகப் போராடுவோம். எங்களுக்கு கோபம் ஏதும் இல்லை. நீங்கள் யாரை வேண்டுமானாலும் பரிந்துரையுங்கள் என்றுதான் கூறினோம். தொகுதிப் பங்கீடுகளை விரைந்து முடியுங்கள் என்று கூறினோம். தொகுதிப் பங்கீடு ஃபார்முலா விரைவில் முடிவு செய்யப்படும்” என்றார்.

முன்னதாக, இண்டியா கூட்டணியின் 4-வது கூட்டம் டெல்லி அசோகாஓட்டலில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் முதல்வர்கள் மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார், மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா உத்தவ் அணி தலைவர் உத்தவ் தாக்கரே உட்பட 28 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மக்களவைத் தேர்தல் முடிவுக்குப்பின் இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முடிவு செய்யப்படுவார் என மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், திடீர் திருப்பமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பெயரை, இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம் என மம்தா பானர்ஜி கூட்டத்தில் விருப்பம் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படுவதில் இருந்து எப்போதும் விலகியிருக்கும் அர்விந்த் கேஜ்ரிவால், இத்திட்டத்தை வழிமொழிந்தார். எதிர்க்கட்சி கூட்டணியில் மல்லிகார்ஜுன கார்கே முக்கியமான தலித் தலைவர் என்பதால், இந்தத் திட்டத்துக்கு இண்டியா கூட்டணியில் உள்ள 12 தலைவர்கள் உடனடியாக ஒப்புதல் தெரிவித்தனர்.

மல்லிகார்ஜுன கார்கே இத்திட்டத்துக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்துவிட்டார். ‘‘நான் கீழ்தட்டு மக்களுக்காக பணியாற்றவே விரும்புகிறேன். இண்டியா கூட்டணி முதலில் வெற்றி பெற வேண்டும், வெற்றி பெறுவதற்கு என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும். பெரும்பான்மை எம்.பி.க்களை பெறுவதற்கு முன்பாக பிரதமர் வேட்பாளர் குறித்து ஆலோசிப்பதில் பயன் இல்லை’’ என கார்கே கூறிவிட்டார். அப்போது எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கே பரிந்துரைக்கப்பட்டது குறித்து நிதிஷ் குமார் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. அதற்கு தற்போது நிதிஷ் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x