Published : 23 Dec 2023 12:17 PM
Last Updated : 23 Dec 2023 12:17 PM

இந்தியாவில் ஒரே நாளில் 752 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி: 4 பேர் பலி

கரோனா பாதிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் (சனிக்கிழமை) மட்டும் 752 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3420-ஆக அதிகரித்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 10 மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் உயர்ந்து வருவதாக நேற்று சுகாதார அமைச்சகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் (சனிக்கிழமை) மட்டும் 752 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,420 ஆக அதிகரித்துள்ளது. மே 21 ஆம் தேதிக்குப் பிறகு இது அதிக அளவிலான எண்ணிக்கை எனக் கூறப்படுகிறது.

அதே சமயத்தில், கர்நாடகாவில் ஒருவரும், கேரளாவில் இரண்டு நபர்களும், ராஜஸ்தானில் ஒருவரும் இறந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நால்வர் பலியானதையடுத்து பலி எண்ணிக்கை 5,33,332 ஆக உயர்ந்துள்ளது. அதாவது இறப்பு விகிதம் 1.18 ஆக பதிவாகியுள்ளது. 4,44,71,212 பேர் கரோனா தொற்றுலிருந்து மீண்டுள்ளனர், அதே நேரத்தில் நாட்டின் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் சதவீதம் 98.81 ஆக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 220.67 கோடி (220,67,79,081) கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஜேஎன்.1, வைரஸின் புதிய மாறுபாடு, நோய்த்தொற்றுகளின் அதிகரிப்புக்குப் பின்னால் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த மாறுபாட்டின் வகைகள் இதுவரை கோவாவிலும், கேரளாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டும் 640 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 2,997ஆக அதிகரித்தது கவனிக்கத்தக்கது.

உலகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும் அதாவது கடந்த 28 நாட்களில் மட்டும் 8.5 லட்சம் பேர் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x