Published : 19 Dec 2023 05:01 AM
Last Updated : 19 Dec 2023 05:01 AM

பாதுகாப்பு குறைபாடு குறித்து கண்டனம் தெரிவித்து அமளி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மேலும் 78 எம்.பி.க்கள் இடைநீக்கம்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 78 எம்.பி.க்கள் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து, இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.படம்: பிடிஐ

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக மத்திய உள்துறை அமித் ஷா விளக்கம் அளிக்க கோரியும், 14 எம்.பி.க்கள் மீதான இடைநீக்கத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் எதிர்க்கட்சிஎம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, இரு அவைகளிலும் நேற்று ஒரே நாளில் 78 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மக்களவையில் நடந்த பாதுகாப்பு விதிமீறல் சம்பவம் தொடர்பாக அவையில்விவாதிக்க வேண்டும் என்றும் மத்தியஉள்துறை அமைச்சர் அமித் ஷா இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 3 நாட்களாக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அவை நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், நேற்று காலை மக்களவை தொடங்கியதும், ‘பாதுகாப்பு விதிமீறல் சம்பவம் தொடர்பாக மத்தியஉள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் தரவேண்டும், 14 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, திமுக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஐயுஎம்எல் கட்சிகளை சேர்ந்த 33 எம்.பி.க்களை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.

அவை நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயல்பட்டதாக திமுக எம்.பி.க்களான டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், அண்ணாதுரை, கலாநிதி வீராச்சாமி, எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், காங்கிரஸ் எம்.பி.க்களான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திருநாவுக்கரசர், விஜய் வசந்த், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த நவாஸ்கனி உள்ளிட்டோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 33 மக்களவை உறுப்பினர்கள் நேற்றுஒரே நாளிஸ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் மக்களவை எம்.பி.க்கள் 14 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மக்களவையில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் விவரம்:

காங்கிரஸ் எம்.பி.க்கள், ஆதிர் ரஞ்சன்சவுத்ரி, அன்டோ ஆண்டனி, கே.முரளீதரன், கொடிகுன்னர் சுரேஷ், அமர் சிங்,ராஜ்மோகன் உன்னிதான், சு.திருநாவுக்கரசர், கவுரவ் கோகோய், விஜய்குமார் வசந்த், டாக்டர் கே.ஜெயக்குமார், அப்துல் காலிக் ஆகியோரும், திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன்,கணேசன் செல்வம், அண்ணாதுரை, டி.சுமதி, கலாநிதி வீராசாமி, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், ராமலிங்கம் செல்லப்பெருமாள், டி.ஆர்.பாலு ஆகியோரும், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கல்யாண் பானர்ஜி, சவுகதா ராய், சதாப்திராய், அசித் குமார் மால், பிரதிமா மண்டல்,ககோலி கோஷ், சுனில் மண்டல், ஐயுஎம்எல் கட்சி எம்.பி.க்களான இ.டி.முகமது பஷீர், கனி கே.நவாஸ், ஆர்எஸ்பிஎம்.பி.யான என்.கே.பிரேமச்சந்திரன் ஆகியோரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலங்களவையில் கோஷம்

பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக, மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து காங்கிரஸ் எம்.பி.க்கள் உட்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 45எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக அவைத் தலைவர் அறிவித்தார்.

ஏற்கெனவே மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் கடந்த 14-ம் தேதி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து, மாநிலங்களவையில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்தது.

மக்களவையில் ஏற்கெனவே 14 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் ஒரு எம்.பி. என 15 பேர் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் நேற்று மட்டும்78 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x