Published : 18 Dec 2023 04:23 PM
Last Updated : 18 Dec 2023 04:23 PM

மக்களவையில் அத்துமீறியவர்களின் சமூக வலைதள விவரம் கேட்டு ‘மெட்டா’வுக்கு டெல்லி போலீஸ் கடிதம்

புதுடெல்லி: மக்களவை அத்துமீறல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரின் சமூக வலைதள கணக்கு, அவர்கள் அறிமுகாகிக் கொண்ட ‘பகத் சிங் ஃபேன்ஸ் க்ளப்’ ஃபேஸ்புக் பக்கத்தின் விபரங்களை கேட்டு ‘மெட்டா’வுக்கு டெல்லி போலீஸார் கடிதம் எழுதியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 13-ம் தேதி நாடாளுமன்றத்தின் பார்வையாளர் மாடத்தில் இருந்த 2 பேர் திடீரென மக்களவைக்குள் குதித்து, வண்ண புகை குப்பிகளை வீசினர். இதுபோல நாடாளுமன்ற வளாகத்திலும் 2 பேர் கோஷங்களை எழுப்பியவாறு வண்ண புகை குப்பிகளை வீசினர். இதையடுத்து, 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன்தொடர்ச்சியாக டெல்லி போலீஸின் பல்வேறு குழுக்கள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களின் வங்கிக் கணக்குகளின் விவரங்களை சேகரித்தனர். ஹரியாணாவின் ஜிந்த் பகுதியில் உள்ள நீலம் தேவி, உத்தரப் பிரதேசத்தின் லக்னோவிலுள்ள சாகர் சர்மாவின் வீட்டுகளில் இருந்து வங்கிக் கணக்கு புத்தகங்களை கைப்பற்றியுள்ளனர். அதேபோல், டெல்லி போலீஸின் உளவுப் பிரிவானது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களைக் கொண்டுள்ள மெட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், பகத் சிங் ஃபேன்ஸ் பக்கத்தில் உள்ள உறுப்பினர்களின் விவரங்கள் மற்றும் 6 பேரின் வாட்ஸ் அப் உரையாடல்களின் விவரங்களின் தகவல்களைக் கேட்டுள்ளனர்.

முன்னதாக, பகத் சிங் ஃபேன்ஸ் பேஜ் கைது செய்யப்பட்டவர்களால் உருவாக்கப்பட்டு பின்னர் அழிப்பட்டது. அதேபோல், மக்களவை அத்துமீறல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்டதாக கருதப்படும் லலித் ஜா, அத்துமீறல் சம்பவம் நிகழ்ந்த பின்னர் ராஜஸ்தானின் குச்சமன் நகரத்துக்குச் தப்பிச் சென்று அங்கு தனது நண்பர் மகேஷ் என்பவரைச் சந்தித்துள்ளார். அவர் லலித் இரவு தங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். ராஜஸ்தான் சென்ற லலித் ஜா தனது செல்போனையும், அவரது நண்பர்களின் செல்போன்களையும் உடைத்து எரித்து பின் எறிந்துவிட்டார். பின்னர் லலித் ஜாவின் உதவியுடன் டெல்லி போலீஸார், ஏரிந்த செல்போன்களின் பாகங்களைக் கண்டுபிடித்து கைப்பற்றியுள்ளனர். அவற்றில் இருந்து ஏதாவது தகவல்களை எடுக்க முடியுமா என்று அறிய தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x