Published : 18 Dec 2023 03:38 PM
Last Updated : 18 Dec 2023 03:38 PM

2020 டெல்லி கலவர வழக்கில் இருந்து அரசு சிறப்பு வழக்கறிஞர் அமித் பிரசாத் விலகல்

புதுடெல்லி: 2020 கலவர வழக்குகளில் டெல்லி காவல்துறை சார்பில் ஆஜராகி வந்த அரசு சிறப்பு வழக்கறிஞர் அமித் பிரசாத் விலகியுள்ளார். அவர் தனது விலகல் கடிதத்தை துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு அனுப்பியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அப்போது கலவரம் வெடித்து 53 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு சர்வதேச கவனம் பெற்று பெரும் விவாதப் பொருளானது. இந்நிலையில், அந்த வழக்கில் ஆஜராகி வந்த அரசு சிறப்பு வழக்கறிஞர் விலகியுள்ளார். இது குறித்து துணைநிலை ஆளுநருக்கு அவர் எழுதிய விலகல் கடிதத்தில், “வடகிழக்கு டெல்லியில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த கலவர வழக்குகளுக்கான அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டேன். இந்த மூன்றரை ஆண்டு காலத்தில் என்னுடைய தகுதிக்கு உட்பட்டு வழக்குகளை சிறப்பாக கையாண்டுள்ளேன். ஆனால், தற்போது என்னால் சிறப்பு வழங்கறிஞராக தொடர இயலவில்லை. அதனால் நான் ராஜினாமா செய்கிறேன். எனது ராஜினாமாவை உடனடியாக ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பினை வழங்கியதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் தனது விலகல் கடிதத்தை கூடுதல் அமர்வு நீதிபதிகள் சமீர் பாஜ்பாய், புலஸ்தியா பிரேமசாலா ஆகியோருடன், டெல்லி காவல் ஆணையர், குற்றப் பிரிவு சிறப்பு ஆணையர், சிறப்பு பிரிவுக்கான சிறப்பு ஆணையர் ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளார். என்றாலும், அதில் தனது விலகலுக்கான காரணத்தை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. இருப்பினும் ஊடகப் பேட்டி ஒன்றில் அவர், தனிப்பட்ட வேலைகளைக் கையாள்வதிலும், மற்ற வழக்குகளில் கவனம் செலுத்துவதிலும் இந்த வழக்கினால் அதிக இடர்பாடு இருந்ததால் ராஜினாமா செய்வதாகக் கூறியிருக்கிறார்.

இருப்பினும், தேசத்தையே உலுக்கிய டெல்லி இளம் பெண் ஷ்ரத்தா வால்கர் படுகொலை வழக்கில் சிறப்பு வழக்கறிஞராக தொடர்வேன் என்று பிரசாத் தெரிவித்துள்ளார். அமித் பிரசாத் கடந்த 2020, ஜூன் 24-ம் தேதி டெல்லியில் நடந்த வகுப்புவாத கலவரம் தொடர்பான வழக்குகளின் சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். டெல்லி கலவர சதி வழக்கு மற்றும் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதான டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை முன்னாள் மாணவர் ஷார்ஜீல் இமாமுக்கு எதிரான தேச துரோக வழக்கில் அரசுத் தரப்பின் முக்கிய முகமாக அமித் பிரசாத் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x