Published : 16 Dec 2023 02:05 PM
Last Updated : 16 Dec 2023 02:05 PM

“நாடாளுமன்ற அத்துமீறலை பயங்கரவாதத் தாக்குதல் எனக் கூறியது டெல்லி போலீஸ்தான்; நாங்கள் அல்ல” - காங்கிரஸ்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறலை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியலாக்கவில்லை என்றும், டெல்லி போலீஸ்தான் அதனை பயங்கரவாதத் தாக்குதல் எனக் கூறியுள்ளது என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ''நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறலை பயங்கரவாத தாக்குதல் என உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் டெல்லி போலீஸ்தான் குறிப்பிட்டுள்ளது. இந்த சம்பவத்தை நாங்கள் அரசியலாக்கவில்லை. இது பயங்கரவாத தாக்குதல் என்றும் நாங்கள் கூறவில்லை. நாடாளுமன்ற பாதுகாப்பில் குறைபாடு நேர்ந்திருப்பதால் அரசு தரப்புக்கு நாங்கள் எங்கள் கவலையைத் தெரிவித்துள்ளோம்.

புதிய நாடாளுமன்றம் உலகின் பாதுகாப்பு மிக்க இடமாக இருக்கும் என்று ஆளும் தரப்பினர் எங்களிடம் கூறினர். மறுநாளே இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதற்குக் காரணம் பாதுகாப்புக் குறைபாடுதான். இதனால், நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராக குரல் எழுப்பியவர்களை இடைநீக்கம் செய்து அரசு தண்டித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இழைத்த தவறுதான் என்ன?'' எனக் கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, பொதுமக்களிடம் நிதி திரட்டுவதற்கான காங்கிரஸ் கட்சியின் திட்டம் குறித்து வேணுகோபால் செய்தியாளர்களிடம் கூறினார். ''நாட்டுக்காக பண உதவி அளியுங்கள்(Donate for Desh) எனும் இயக்கத்தை நாங்கள் தொடங்க இருக்கிறோம். திலகர் ஸ்வராஜ்ய நிதி என்ற பெயரில் நிதி திரட்டும் இயக்கத்தை 1920-21ல் மகாத்மா காந்தி தொடங்கினார். இதன் நோக்கம், கட்சியை வலுப்படுத்தி, நாட்டை வளப்படுத்துவதே. அந்த இயக்கத்தை மனதில் கொண்டு தற்போது நாட்டுக்காக பண உதவி அளியுங்கள் எனும் இயக்கத்தை காங்கிரஸ் கட்சி தொடங்க உள்ளது. கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டிசம்பர் 18-ம் தேதி இந்த பிரச்சார இயக்கத்தை தொடங்கிவைக்க இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி தொடங்கி தற்போது 138வது ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, எங்கள் கட்சியின் மாவட்ட, மாநில, தேசிய அளவில் பொறுப்பில் இருப்பவர்கள் குறைந்தபட்சம் ரூ. 1,380 அளிக்க நாங்கள் ஊக்கப்படுத்த இருக்கிறோம். அதேபோல், காங்கிரஸ் ஆதரவாளர்கள் குறைந்தபட்சம் ரூ. 138 மற்றும் அதன் மடங்குகளில் நிதி உதவி அளிக்க கோருவோம். இந்த நிதி உதவி இயக்கம் வரும் 28ம் தேதி வரை ஆன்லைனில் மட்டும் நடக்கும். அதன் பிறகு நேரடியாக பணம் வசூலிக்கும் முறை மேற்கொள்ளப்படும். வீடு வீடாகச் சென்று காங்கிரஸ் ஆதரவாளர்களிடம் தொண்டர்கள் நிதி திரட்டுவார்கள். ஒவ்வொரு வீட்டிலும் ரூ.138 வசூலிக்க வேண்டும், ஒரு வார்டுக்கு குறைந்தது 10 வீடுகளிலாவது வசூலிக்க வேண்டும் என்பதே இலக்கு'' என கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x