Published : 11 Dec 2023 04:54 AM
Last Updated : 11 Dec 2023 04:54 AM

காங்கிரஸ் - சமாஜ்வாடி இடையே சுமுக உடன்பாடு: டெல்லியில் டிச.19-ல் இண்டியா கூட்டணி கூட்டம்

புதுடெல்லி: காங்கிரஸ் - சமாஜ்வாடி இடையே சுமுக உடன்பாடு எட்டப்பட்டதால், இண்டியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் டெல்லியில் வரும் 19-ம் தேதிநடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்து நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியை எதிர்கொள்ள, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இண்டியா கூட்டணியை அமைத்தன. ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநிலசட்டப்பேரவை தேர்தலின்போது,தொகுதி பங்கீடு தொடர்பாக இண்டியா கூட்டணி கட்சிகள் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் தனித்து போட்டியிட்டன. மத்திய பிரதேசத்திலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், சமாஜ்வாடியுடன் இருந்த கருத்து வேறுபாடுகளை காங்கிரஸ் சரிசெய்துள்ளது. சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் இண்டியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அகிலேஷ் யாதவ்,பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தங்களால் வரஇயலவில்லை என்று தெரிவித்துவிட்டனர். இதனால் இந்த கூட்டம் தள்ளிப்போடப்பட்டது.

காங்கிரஸ் - சமாஜ்வாதி கட்சி இடையே இருந்த வேறுபாடுகள் பேசி தீர்க்கப்பட்டுள்ளதால், இண்டியா கூட்டணி கூட்டம் டெல்லியில் வரும் 19-ம் தேதி நடக்க வாய்ப்பு உள்ளது என்றுஇண்டியா கூட்டணி கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். வரும் தேர்தல்களில் இண்டியா கூட்டணி இடையே தொகுதி பங்கீடு குறித்து இதில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம்,சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலசட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது. தெலங்கானாவில் மட்டும் வெற்றி பெற்றது.

அதனால் இண்டியா கூட்டணிகட்சிகளுடன் தொகுதி பங்கீடுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துவது காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் நெருக்கடியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x