Published : 07 Dec 2023 04:36 AM
Last Updated : 07 Dec 2023 04:36 AM

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் முதல்வர்கள் தேர்வு குறித்து பாஜக தீவிர ஆலோசனை: இன்று முக்கிய முடிவெடுக்க வாய்ப்பு

புதுடெல்லி: ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் யாரை முதல்வர்களாக தேர்வு செய்வது என்பது குறித்து பாஜக மேலிடம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து அக்கட்சியின் உயர்நிலைக் கூட்டம் கடந்த 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 3 மாநிலங்களிலும் யாரை முதல்வர்களாக தேர்வு செய்வது என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இது குறித்து எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தை எப்போது நடத்துவது என்பதை தீர்மானிப்பதற்காக இந்த கூட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆட்சிமன்ற குழு கூட்டத்தில், 3 மாநிலங்களின் சட்டப்பேரவை கட்சி கூட்டங்களுக்கு மேலிடப் பார்வையாளர்களை நியமிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

இதுகுறித்து பாஜக நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘முதல்வர்கள் தேர்வு குறித்து முடிவெடுப்பதற்கு முன்பாக, கட்சியின் அடிமட்ட தொண்டர்களிடம் இருந்து பெறப்படும் கருத்துகளை கட்சியின் மேலிடம் மதிப்பீடு செய்யும். யாரும், தங்களின் பலத்தை காட்ட எம்எல்ஏக்களை அணி சேர்ப்பதை மூத்த தலைவர்கள் எவரும் விரும்பவில்லை’’ என்றார்.

ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு ஆதரவு தெரிவித்து எம்எல்ஏக்கள் அணி சேர்வதாக வரும் தகவலை அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.

ராஜஸ்தானில் யார் முதல்வர் என்ற சஸ்பென்ஸ் தொடர்கிறது. ராஜஸ்தானில் பாஜக புதிய எம்எல்ஏக்கள் பலர், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் மாநில பாஜக தலைவர் சி.பி.ஜோஷி ஆகியோரை சந்தித்து பேசி வருகின்றனர். ராஜஸ்தான் மாநில பாஜக பொறுப்பாளர் அருண் சிங்கும், ஜோஷியை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அவர்கள் கட்சியின் பொதுச் செயலாளர் சந்திரசேகருடனும் ஜெய்ப்பூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். தியா குமாரி மற்றும் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ஆகியோரும் முதல்வருக்கான போட்டியில் உள்ளனர்.

ஜோஷி, அருண் சிங் ஆகியோர் டெல்லியில் டிச.4-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்த பின்பும் பல கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றது.

இதுகுறித்து அருண் சிங் கூறும்போது, ‘‘பாஜக ஆட்சிமன்ற குழு கூட்டத்தில், என்ன முடிவு எடுத்தாலும், அது அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்கும். முதல்வர்கள் தேர்வு குறித்த முடிவு விரைவில் எடுக்கப்படும்’’ என்றார்.

இந்நிலையில், பாஜக ஆட்சி மன்றக் குழு கூட்டம் இன்று நடைபெறலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதில் புதிய முதல்வர்களை தேர்வு செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும்.

அதேபோல் சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரிலும் பாஜக எம்எல்ஏக்கள், முன்னாள் முதல்வர் ரமண் சிங்கை சந்தித்து வருகின்றனர். முன்னாள் முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்க வந்தோம் என அவர்கள் கூறினர். இங்கு அருண் ஷா, ஓ.பி.சவுத்திரி, மோம்தி சாய் ஆகியோரும் முதல்வருக்கான போட்டியில் உள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வீடியோவில், ‘‘முதல்வர் பதவிக்கு நான் எப்போதும் போட்டியிட்டதில்லை. கட்சி தொண்டராக எனக்கு பாஜக மேலிடம் ஒதுக்கும் பணியை அர்ப்பணிப்புடனும், திறமையுடனும், நேர்மையாகவும் செய்கிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x