Published : 06 Dec 2023 11:29 AM
Last Updated : 06 Dec 2023 11:29 AM

பாதாளச் சாக்கடை, கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்புப் பணியின்போது இந்த ஆண்டு 49 பேர் உயிரிழப்பு: மத்திய அரசு தகவல்

படம்: எஸ்.எஸ்.குமார்

புதுடெல்லி: பாதாளச்சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளைப் பாதுகாப்பற்ற முறையில் கையால் சுத்தம் செய்யும் பணியின் போது 2023, நவ. 20-ம் தேதி வரையில் 49 பேர் உயிரிந்துள்ளதாக மக்களவையில் மத்திய அரசு செவ்வாய்கிழமை (டிச.5) தெரிவித்துள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபரூபா போட்டார், கழிவுகளைக் கையால் சுத்தம் செய்தல், கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் பணிகளின் போது நிகழ்ந்த உயிரிழப்புகளைத் தடுக்க மனிதர்களைக் கொண்டு கழிவுகளை சுத்தம் செய்யப்போவதில்லை என்ற திட்டம் எந்த நிலையில் உள்ளது என மக்களவையில் கேள்விகள் எழுப்பி இருந்தார்.

இதற்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராமதாஸ் அத்வாலே பதில் அளித்து பேசுகையில், "கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஆபத்தான முறையில் பாதாளச் சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியின் போது 443 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தாண்டு (2023) நவ.20 தேதி வரை 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் 10 பேரும், குஜராத்தில் 9 பேரும், தமிழகத்தில் 7 பேரும், மகாராஷ்டிராவில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் கழிவுகளை அகற்ற இயந்திரங்களைப் பயன்படுத்துவது பற்றிய தரவுகள் ஏதும் இல்லை" என்று தெரிவித்தார். கழிவுநீர் சுத்தம் செய்யும் பணிகளுக்கு இயந்திரங்களை அறிமுகம் செய்யப்போவதாக மேற்கு வங்கம், கேரளா, மகாராஷ்டிரா மாநில அதிகாரிகள் அறிவித்திருக்கும் நிலையில், மத்திய அமைச்சர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு ’தி இந்து’ நாளிதழ் வெளியிட்ட செய்தியின் படி, ஏற்கனவே கழிவுகளை சுத்தம் செய்யும் பணியாளர்களைப் பற்றி நாடுதழுவிய அளவில் கணக்கெடுக்கும் பணியினை மத்திய அரசு கணக்கில் எடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தற்போது கடந்த 2018-ம் ஆண்டு தூய்மைப் பணியாளர்களைப் பற்றி எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே செயல்பட்டு வருகிறது. அதன்படி, சுமார் 58,000 தூய்மைப்பணியாளர்கள் தங்களின் மறுவாழ்வு திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவானது, இன்னும் பல இடங்களில் மனிதர்களைக் கொண்டு கழிவுகளைச் சுத்தம் செய்யும் வழக்கம் உள்ளது என்று சமூக செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, 766 மாவட்டங்களில், 716 மாவட்டங்கள் கழிவுகளை சுத்தம் செய்யும் பணிக்கு மனிதர்களை ஈடுபட்டுத்துவதில்லை என்று அறிவித்துள்ளன. அவ்வாறு அறிவிக்காத மீதமிருக்கும் மாவட்டங்களில் இருக்கின்ற சுகாதாரமற்ற கழிவறைகள் பற்றி அறிக்கை அளிக்கும் படி வலியுறுத்தப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், கழிவுகளை அகற்ற மனிதர்கள் பயன்படுத்தப்படவில்லை என்ற சுயஅறிவிப்பும், அந்த மாவட்டங்களில் சுகாதாரமற்ற கழிப்பறைகளின் எண்ணிக்கையை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. அந்த மாவட்டத்தில் சுகாதாரமற்ற கழிப்பறைகள் இல்லை என்றால் அங்கு கழிவுகளை கையால் சுத்தம் செய்யும் பணியாளர்கள் இல்லை என்று பொருள் என மூத்த சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x