Published : 01 Dec 2023 07:22 AM
Last Updated : 01 Dec 2023 07:22 AM
புதுடெல்லி: ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று வெளியாகின. ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. தெலங்கானா, சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி அமையக்கூடும். மத்திய பிரதேசம், மிசோரமில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் சமபலத்துடன் உள்ளன. இவ்விரு கட்சிகளுக்கிடையே இழுபறி நீடிப்பதாக கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் என்று பெரும்பான்மையான கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும், பாஜகவுக்கு அறுதிப்பெரும்பான்மை கிடைப்பது கடினம் என்று கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) பின்னடைவை சந்திக்கும். காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றக்கூடும். மிசோரமில் ஆளும் மிசோ தேசிய முன்னணி (மி.தே.மு) ஜோரம் மக்கள் முன்னணிக்கு (ஜோ.ம.மு) பெரும்பான்மை இடங்கள் கிடைப்பது கடினம். அந்த மாநிலத்தில் இழுபறி நீடிக்கக்கூடும் என்று கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment