Published : 30 Nov 2023 10:14 AM
Last Updated : 30 Nov 2023 10:14 AM
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் உள்ள119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று (நவ.30) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில் வாக்களிக்க வந்த இடத்தில் தனது கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்ததார் என்று பிஆர்எஸ் கட்சி எம்எல்சி கவிதா மீது காங்கிரஸ் கட்சி தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்துள்ளது.
தெலங்கானாவில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவுகள் தொடங்கின. இதனை ஒட்டி இன்று காலை முதலே பிரமுகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். சபரிமலைக்கு மாலை அணிந்துள்ள நிலையில், நடிகர் சிரஞ்சீவி ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் தனது குடும்பத்தாருடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.
இதேபோன்று இங்கு ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன், மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, எம்.எல்.சி கவிதா உள்ளிட்டோர் வாக்களித்தனர். இது விடுமுறை அல்ல. ஜனநாயக கடமை என்பதால் அனைவரும் வாக்களிக்க முன் வரவேண்டுமென பிரமுகர்கள் வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
பிஆர் எஸ் கட்சி எம்எல்சி கவிதா, பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள டிஏவி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் மக்கள் பிஆர்எஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரினார். இதனை சுட்டிக் காட்டியுள்ள தெலங்கானா காங்கிரஸ் மூத்த துணைத் தலைவர், தேர்தல் ஆணைய ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஜி.நிரஞ்சன், ”வாக்குச்சாவடிக்கு வெளியே வாக்கு சேகரித்து கவிதா தேர்ந்த நடத்தை விதிமுறையை மீறியுள்ளார். இது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜ் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளோம்” என்றார்.
ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில்,தெலங்கானாவில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர், மேற்கண்ட 5 மாநிலங்களுக்கும் டிச.3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ், ஆளும் பிஆர்எஸ், பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது. பிஆர்எஸ் ஹாட்ரிக் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment