Published : 31 Jul 2014 10:00 AM
Last Updated : 31 Jul 2014 10:00 AM

தெலங்கானாவில் 2 மாதத்தில் 101 விவசாயிகள் தற்கொலை

ஆந்திராவிலிருந்து பிரிந்து புதிதாக உருவான தெலங்கானா மாநிலத்தில் கடந்த 2 மாதத்தில் மட்டும் 101 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினரின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

கடந்த 56 ஆண்டு கால போராட் டத்தின் விளைவாக, கடந்த ஜூன் 2-ம் தேதி தெலங்கானா மாநிலம் அதிகாரப்பூர்வமாக உருவானது. புதிய மாநிலம் உருவானது முதலே விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரிகரித்து வருகிறது.

புதிய மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்காக பல்வேறு அரசியல் கட்சிகள் விவசாயிகளுக்கு ஆதர வாக தேர்தல் வாக்குறுதிகள் அளித்தன. இதில் முதன்முறையாக ஆட்சி அமைத்துள்ள தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வங்கிக் கடன் முழுவதையும் ரத்து செய்வதாக அறிவித்தது.

விவசாயிகள் இதை நம்பி மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ஆனால் விவசாயக் கடன் ரத்து திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதம் ஆவதால் செய்வதறியாது தற்கொலை முடிவுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளாகக் கூறப்படுகிறது. புதிய அரசு பதவியேற்ற கடந்த 2 மாதத்தில் மட்டும் 101 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தில் பருவமழை பெய்தபோதும், சில மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்து. இதற்கிடையே விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணம் இயற்கை சீற்றமா அல்லது அரசியலா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.​

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x