Published : 05 Nov 2023 06:16 AM
Last Updated : 05 Nov 2023 06:16 AM

மத்திய பிரதேசத்தில் திருமணம் ஆகாத விரக்தியில் தேர்தல் பணிக்கு வர மறுத்த ஆசிரியர் சஸ்பெண்ட்

போபால்: மத்திய பிரதேசத்தில் திருமணம் ஆகாத விரக்தியில் தேர்தல் பணிக்கு வர மறுத்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் சாத்னா மாவட்டம் அமர்பட்டான் பகுதியிலுள்ள மஹுதூர் மேல்நிலைப் பள்ளியில் சம்ஸ்கிருத ஆசிரியராக பணியாற்றி வருபவர் அகிலேஷ் குமார் மிஸ்ரா (35).

இம்மாதத்தில் மத்தியபிரதேச மாநிலசட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. மற்ற ஆசிரியர்களைப் போலவேஇவருக்கும் தேர்தல் பணியில் ஈடுபடவேண்டும் என்றும், கடந்த 16, 17-ம் தேதிகளில் நடைபெற்ற தேர்தல் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள வேண்டும்மென்றும் அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் தேர்தல் பணியில் ஈடுபட மாட்டேன் என்றும், பயிற்சி முகாமில் பங்கேற்க மாட்டேன் என்றும் கூறி அகிலேஷ், மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் எழுதினார்.

இதையடுத்து, தேர்தல் பணியில் ஈடுபடமாட்டேன் என்று மறுப்பு தெரிவித்ததால் உங்களை ஏன் சஸ்பெண்ட் செய்யக்கூடாது என்று கூறி விளக்கம் கேட்டு நோட்டீஸை மாவட்ட நிர்வாகம் அனுப்பியது.

விரிவான கடிதம்: அதற்கு அகிலேஷ் எழுதிய பதிலில் கூறியுள்ளதாவது: முதலில் எனக்கு திருமணம் ஆகட்டும்.அதன்பின்னர், நான் தேர்தல் பணிக்கு வருகிறேன். என் முழு வாழ்க்கையும் மனைவி இல்லாமல் கழிகிறது. என் இரவுகள் அனைத்தும் வீணாகின்றன. திருமணம் செய்யும் பெண் எனக்கு வரதட்சணையாக ரூ.3.5 லட்சம் எனக்குத்தரவேண்டும். அது ரொக்கமாகவோ அல்லது எனது வங்கிக் கணக் குக்கோ அனுப்பலாம். ரேவா மாவட்டத்தில் உள்ள சிங்ரவுலி அல்லது சம்தாரியா பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாங்க எனக்கு கடன் உதவி அரசு செய்து தரவேண்டும். இவ்வாறு அவர் கடிதத்தில் எழுதியிருந்தார்.

அவரது கடிதத்தை பார்த்த மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி அடைந்து, அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்யுமாறு உத்தரவிட்டார். திருமணம் செய்ய வரதட்சணை கேட்பேன் என்று கடிதத்தில் கூறியிருந்ததால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அகிலேஷை தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் செல்போனை பயன்படுத்துவதில்லை என்பதால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அவரது நண்பர் ஒருவர்தெரிவித்தார். மேலும் திருமணம் ஆகாததால் அவர் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து அவருடன் பணியாற்றும் சக ஊழியர் ஒருவர் கூறும்போது, “அவர் கடந்த சிலமாதங்களாக மன அழுத்தத்தில் இருக்கிறார். இல்லையென்றால், இது போன்றவினோதமான கடிதத்தை யார் எழுதுவார்கள்? அதுவும் விளக்க நோட்டீஸ் கேட்டதற்கு இப்படி யாராவது பதில் எழுதுவார்களா? ஒரு ஆண்டுக்கு முன்பே அவர் செல்போன் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டார்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x