Last Updated : 04 Nov, 2023 06:49 AM

 

Published : 04 Nov 2023 06:49 AM
Last Updated : 04 Nov 2023 06:49 AM

காவிரியில் தமிழகத்துக்கு 2,600 கன அடி நீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

கோப்புப்படம்

புதுடெல்லி / பெங்களூரு: காவிரியில் தமிழகத்துக்கு நவம்பர் 23-ம் தேதி வரை விநாடிக்கு 2,600 கன அடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு கர்நாடக அரசும், விவசாய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் குழு கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில்தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன், கர்நாடக நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ் சிங் மற்றும் கேரள, புதுச்சேரி அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதில் த‌மிழக அரசின் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, ‘‘உச்சநீதிமன்றத்தின் இறுதி உத்தரவின்படி, தமிழகத்துக்கு அக்டோபரில் 140.099 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும். ஆனால் நிகழாண்டில் இதுவரை 56.394 டிஎம்சி நீர் மட்டுமே திறந்துவிட்டுள்ளது. 83.705 டிஎம்சி நீர் இன்னும் நிலுவையில் உள்ளது.

மேட்டூர் அணையில் 18 டிஎம்சிக்கும் குறைவான அளவில் நீர் இருப்பு உள்ளது. த‌மிழக விவசாயிகளின் நெற்பயிர்களை காப்பாற்றுவதற்கு விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடி நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்'' என வலியுறுத்தினார்.

அதற்கு கர்நாடக அரசின் தரப்பில், ‘‘கர்நாடகாவில் கடும்வறட்சி நிலவுகிற‌து. கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதிஆகிய அணைகளில் குறைந்த அளவில்தான் நீர் இருப்பு உள்ளது.கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. எனவே தமிழகத்தின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாத நிலையில் கர்நாடகா இருக்கிறது.

தற்போது அணையில் இருக்கும் நீரைக் கொண்டே குடிநீர் மற்றும்விவசாய தேவையை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. மேகேதாட்டுவில் புதிதாக‌ அணை கட்டினால் மழைக்காலங்களில் அதிகளவில் நீரை தேக்க முடியும். வீணாக கடலில் காவிரி நீர் கலப்பதை தடுக்க முடியும். எனவே மேகேதாட்டுவில் அணைக் கட்ட அனுமதிக்கவேண்டும்'' என வலியுறுத்தப்பட்டது.

அப்போது தமிழக அரசின் தரப்பில், ‘‘மேகேதாட்டு அணை விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதனைப் பற்றி காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்க கூடாது. நீர் பங்கீடு செய்வதற்கும் புதிய அணை கட்டுவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை'' என ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இறுதியில் பேசிய காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர், ‘‘தமிழகத்தின் விவசாய தேவைக்காக கர்நாடக அரசு கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து நவம்பர் 23-ம் தேதிவரை விநாடிக்கு 2,600 கன அடி நீரை திறந்துவிட வேண்டும். அதாவது பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் விநாடிக்கு 2,600 கன அடி நீர் தமிழகத்துக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டார்.

கர்நாடகா எதிர்ப்பு: இந்த உத்தரவுக்கு கர்நாடகாவில் பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினரும், விவசாய மற்றும் கன்னட அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கர்நாடக துணை முதல்வரும் நீர்வளத்துறை பொறுப்பு அமைச்சருமான‌ டி.கே.சிவகுமார் கூறுகையில், ‘‘காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்க முடியாது. கர்நாடக அணைகளில் நீர் இல்லை.எங்களுக்கே நீர் இல்லாத போதுத‌மிழகத்துக்கு எப்படி நீரை திறந்துவிட முடியும்? இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிட இருக்கிறோம். இதுகுறித்து முதல்வர் சித்தராமையா சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பார்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x