Published : 04 Nov 2023 07:22 AM
Last Updated : 04 Nov 2023 07:22 AM

பெண்களுக்கு ரூ.12,000, ரூ.500-க்கு காஸ் சிலிண்டர்: சத்தீஸ்கரில் பாஜக தேர்தல் வாக்குறுதி

பாஜக.வின் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று வெளியிட்டார்

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 7 மற்றும் 17-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் சத்தீஸ்கரின் குஷாபாவ் தாக்ரே பரிசர் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில், ‘மோடியின் 2023-ம் ஆண்டு உத்திரவாதம்’ என்ற பெயரில் பாஜக.வின் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:

  • திருமணமான பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 நிதி யுதவி அளிக்கப்படும்.
  • சத்தீஸ்கரில் 2 ஆண்டுகளில் ஒரு லட்சம் அரசு காலி பணி யிடங்கள் நிரப்பப்படும்.
  • ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு சமையல் காஸ் சிலிண்டர் ரூ.500-க்கு வழங்கப்படும்.
  • கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு, பயணப்படி அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
  • பிரதமரின் வீட்டு வசதி திட்டத் தின் கீழ் 18 லட்சம் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் 2 ஆண்டுகளில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும்.
  • தீன்தயாள் உபாத்யாய் கிரிஷி மஜ்தூர் திட்டத்தின் கீழ் நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும்.
  • கிரிஷி உன்னதி திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து ஏக்கருக்கு 21 குவிண்டால் நெல் தலா ரூ.3,100-க்கு கொள்முதல் செய்யப்படும்.
  • அயோத்தியில் ராமர் கோயிலை பார்வையிட மக்கள் அழைத்துச் செல்லப்படுவர்.

இவ்வாறு தேர்தல் அறிக்கையில் பாஜக தெரிவித்துள்ளது.

முதல்முறை வாக்குச்சாவடி: சத்தீஸ்கரில் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பஸ்தார் பிராந்தியத்தின் 40 உட்புற கிராமங்களில் முதல் முறையாக வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

சத்தீஸ்கரில் முதல் கட்ட தேர்தலை சந்திக்கும் 20 தொகுதிகளில் 12 தொகுதிகள் பஸ்தார் பிராந்தியத்தில் உள்ளன. இந்தப் பிராந்தியம் முழுவதும் மாவோயிஸ்ட் ஆதிக்கம் செலுத்தி வந்ததால் இதன் உட்புற பகுதிகளில் வாக்குப்பதிவு நடத்துவது தேர்தல் ஆணையம் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வந்தது. இதனால் இந்த கிராமங்களை விட்டு பல கி.மீ. தொலைவில் பாதுகாப்பான இடங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன.

மறுபுறத்தில் மாவோயிஸ்ட் அமைப்புகள் தேர்தலை புறக்கணித்து வந்தன. யார் வாக்களித்தாலும் விரலை வெட்டுவோம் என கிராம மக்களை எச்சரித்து வந்தனர். இதனால் கிராம மக்கள் வாக்களிக்க முடியாமல் தவித்தனர்.

இந்நிலையில் இப்பிராந்தி யத்தில் தற்போது சூழ்நிலைகள் மாறியுள்ளன. முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த முறை இந்தப் பிராந்தியத்தின் 40 உட்புற கிராமங்களில் 126 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த கிராமங்களில் முதல்முறையாக வாக்குப் பதிவு நடைபெற இருப்பதால் மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x