Published : 01 Nov 2023 11:10 AM
Last Updated : 01 Nov 2023 11:10 AM

மணிப்பூர் | போலீஸ் உயர் அதிகாரி சுட்டுக் கொலை; முரே நகரில் பயங்கர தாக்குதல் - நடந்தது என்ன?

ம்ணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்

டெல்லி: மணிப்பூரில் தமிழர்கள் அதிகம் வாழும் முரே நகரில் போலீஸார் மீது ஆயுதமேந்திய குகி இன பழங்குடிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஒரு போலீஸ் உயர் அதிகாரி உயிரிழந்தார். மேலும் 3 போலீஸார் படுகாயமடைந்துள்ளனர்.

மணிப்பூரில் ஏற்பட்டிருக்கும் குகி மற்றும் மைத்தேயி இன மக்களுக்கு இடையிலான வன்முறைப் போராட்டம் இன்னும் நீடித்துவருகிறது. மேலும், சில மாதங்களுக்கு முன்பு மணிப்பூரில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்ற வீடியோ உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மணிப்பூரின் முரே நகரில் தமிழர்கள் பெரும்பான்மையான அளவு வசிக்கின்றனர். அங்கு புதிதாக ஹெலிபேட் அமைக்க மாநில அரசு முடிவு செய்தது. இதற்கான கட்டுமானப் பணிகளை பார்வையிட மணிப்பூர் போலீஸ் அதிகாரி ஆனந்த் குமார் அந்த நகருக்குச் சென்றார்.

அப்போது அங்கு மறைந்திருந்த குகி சமுதாயத்தை சேர்ந்த ஆயுதமேந்திய பழங்குடிகள் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஆனந்த் குமார் பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து முரே பகுதிகளில் போலீஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கைக்கு எதிராக, குகி பழங்குடிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 3 போலீஸார் படுகாயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து முரே நகரில் பதற்றம் நிலவுகிறது.

பின்னர் இந்தச் சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்த முதல்வர் பிரேன் சிங், "போலீஸ் அதிகாரி ஆனந்த் குமாரின் மரணம் மிகவும் வருத்தமளிக்கிறது. மக்களைப் பாதுகாப்பதிலும், அவர்களுக்குச் சேவை செய்வதிலும் இருந்த அவரின் அர்ப்பணிப்பு எப்போதும் நினைவுகூரத்தக்கது. குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவார்கள்" என்று தன்னுடைய எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரூ.50 லட்சம் நிதி உதவி: இந்த தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து முதல்வர் பிரேன் சிங் அவசர அமைச்சரவையை கூட்டத்தை நடத்தினார். இதையடுத்து குகி பழங்குடிகளின் தாக்குதலில் பலியான போலீஸ் அதிகாரியின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுட்டுக் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் எனவும் மணிப்பூர் அரசு அறிவித்துள்ளது.

இந்த புதிய வன்முறை சம்பவத்துக்கு மத்தியில், மணிப்பூர் அரசு வடகிழக்கு மாநிலம் முழுவதும் மொபைல் டேட்டா மற்றும் இணைய சேவைகள் மீதான இடைநிறுத்தத்தை மேலும் ஐந்து நாட்களுக்கு நீட்டித்துள்ளது. மேலும் உலக குகி-ஸோ அறிவுசார் கவுன்சிலை (WKZIC) சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட குழுவாக அறிவிக்க மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x