Published : 01 Nov 2023 06:08 AM
Last Updated : 01 Nov 2023 06:08 AM
கேவடியா: அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த தினம், தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதன்படி நாடு முழுவதும் நேற்றுஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது. குஜராத்தின் நர்மதை மாவட்டம், கேவடியாவில் அமைக்கப்பட்டுள்ள படேலின் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று மரியாதை செலுத்தினார். அங்கு நடைபெற்ற விழாவில் அவர் பேசியதாவது:
சுதந்திர தினம், குடியரசு தினத்தை போன்று தேசிய ஒற்றுமை தினமும் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் விடுதலைக்காக ஏராளமான தலைவர்கள் உயிரை தியாகம் செய்தனர். சுதந்திர இந்தியாவில் வாழும் நாம், படேல் காட்டிய வழியில் நாட்டின் வளர்ச்சிக்காக கடினமாக உழைக்க வேண்டும். நாட்டின் 140 கோடி மக்களின் உழைப்பால் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்.
உலகம் முழுவதும் தற்போது குழப்பமான சூழல் நிலவுகிறது. ஆனாலும் இந்தியா புதிய வரலாறுகளை படைத்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 13.5 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். தேஜாஸ் போர் விமானம், ஐஎன்எஸ் விக்ராந்த் விமானந்தாங்கி போர்க்கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு உள்ளன.
சர்வதேச அளவில் 5-வது பெரியபொருளாதார நாடாக இந்தியா முன்னேறி உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் 3-வது பெரிய பொருளாதார நாடு இடத்தை எட்டிப் பிடிப்போம். நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமையை பெற்றிருக்கிறோம். நமது வீரர், வீராங்கனைகள் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.பழைய சட்டங்கள் நீக்கப்பட்டு இன்றைய காலத்துக்கு ஏற்ற புதிய சட்டங்கள் அமல் செய்யப்படுகின்றன.
ஒரு காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் குண்டுகள் வெடித்தன. தீவிரவாதம் தலைதூக்கியது. சிலர்தீவிரவாதிகளை காப்பாற்ற நீதிமன்றங்களை நாடினர். ஒரு காலத்தில் காஷ்மீரில் தீவிரவாதம் தலைதூக்கி இருந்தது. காஷ்மீருக்கான சிறப்புஅந்தஸ்து நீக்கப்பட்டு, அங்கு வளர்ச்சி திட்டப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதன் காரணமாக தீவிரவாத பிடியில் இருந்து காஷ்மீர் மக்கள் மீண்டுள்ளனர். நாட்டின் பாதுகாப்பு சார்ந்தவிவகாரத்தில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.மத்தியில் ஆளும் பாஜக அரசு,நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. கடந்த 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் பேசினார்.
பாரம்பரிய ரயில் சேவை: குஜராத்தின் முதல் பாரம்பரிய ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது:
வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை கேவடியாவில் இருந்து அகமதாபாத்துக்கு நீராவி ரயில் இன்ஜின் பொருத்தப்பட்ட பாரம்பரிய ரயில் இயக்கப்படும். பயணிகளின் வரவேற்பை பொறுத்து கூடுதல் சேவைகள் இயக்கப்படும். பாரம்பரிய ரயிலில் 3 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ் வொரு பெட்டியிலும் 48 இருக்கைகள் உள்ளன. 28 இருக்கை வசதி கொண்ட குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ஓட்டல் வசதியும் இருக்கிறது.
இவ்வாறு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...