Published : 17 Oct 2023 07:03 PM
Last Updated : 17 Oct 2023 07:03 PM

தன்பாலினர் திருமணத்தை அங்கீகரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: ஆதரவும் எதிர்ப்பும் - ஒரு பார்வை

உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை அறிய வந்த ஆர்வலர்கள் | படம்: சஷி சேகர் காஷ்யப்

புதுடெல்லி: தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதை நாடாளுமன்றம், சட்டமன்றங்களே முடிவு செய்யும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் வெளியாகி உள்ளன.

தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரும் வழக்கில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எஸ்.ரவீந்திர பட், ஹீமா கோலி, பிஎஸ் நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு 4 வெவ்வேறு தீர்ப்புகளை செவ்வாய்க்கிழமை வழங்கியது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "உச்ச நீதிமன்றத்தால் சிறப்புத் திருமணச் சட்டத்தை ரத்து செய்ய முடியாது. அதில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை அங்கீகரிக்கும் ஷரத்தை சேர்க்கவும் முடியாது. திருமணங்கள் தொடர்பான சட்டங்களை நாடாளுமன்றமும், சட்டமன்றங்களும்தான் இயற்ற முடியும். இப்போதுள்ள சட்டத்தின்படி திருமணத்துக்கு அங்கீகாரம் பெற்றுக்கொள்ள இயலாது என்பதால் நாடாளுமன்றமும், சட்டமன்றங்களுமே தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரிப்பதா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.

நீதிபதி பட் தனது தீர்ப்பில், "திருமண பந்தங்களை சட்டங்கள்தான் அங்கீகரிக்கும். இந்த நீதிமன்றம் அதற்கான சட்டங்களை இயற்றும்படி அரசை வலியுறுத்த மட்டுமே முடியும்" என குறிப்பிட்டார். நீதிபதி கவுல் அளித்த தீர்ப்பில், "தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்தை அங்கீகரிப்பதன் மூலம் திருமண சமத்துவத்தில் அடுத்த அடியை எடுத்துவைக்கலாம்" என்று கூறினார். 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 5 நீதிபதிகளும் வேறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். தன்பாலின திருமணத்தை சட்டபூர்வ அங்கீகரிப்பது நாடாளுமன்றம், சட்டமன்றங்களால் மட்டுமே முடியும் என்ற நிலைப்பாட்டினை 3 நீதிபதிகள் எடுத்ததை அடுத்து, இந்த விவகாரம் தற்போது நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களின் கைகளுக்குச் சென்றுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் வெளியாகி உள்ளன. இந்த வழக்கில் மனுதாரர்களில் ஒருவரும், LGBTQ+ உரிமை ஆர்வலருமான ஹரிஷ் ஐயர், தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக இல்லாவிட்டாலும், உச்ச நீதிமன்றத்தின் பல அவதானிப்புகள் LGBTQ+ சமூகத்துக்ச் சாதகமாக அமைந்துள்ளதாகக் கூறினார். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ஆர்எஸ்எஸ் வரவேற்றுள்ளது. இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அந்த அமைப்பின் பிரச்சார பிரிவு பொறுப்பாளர் சுணில் அம்பேத்கர், "தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமண விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. நமது நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறை, இந்த விவகாரத்தில் அனைத்து அம்சங்கள் குறித்தும் விவாதித்து பொருத்தமான முடிவை எடுத்துள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

"உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பில் நாங்கள் திருப்தி அடைகிறோம். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தவர்கள் உள்பட அனைத்து தரப்பினரின் கருத்துகளும் கேட்கப்பட்டு, தன்பாலின திருமணம் உரிமையாக இருக்க முடியாது என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறது. இது அடிப்படை உரிமை கிடையாது என்பது உறுதியாகி உள்ளது" என விஹெச்பி தெரிவித்துள்ளது.

இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் வரவேற்றுள்ளது. அந்த அமைப்பின் தலைவர் ஆதிஷ் அகர்வாலா, "தன்பாலின திருமண விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா ஒரு புராதன நாடு. இங்கே தன்பாலினத்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு நீதிமன்றத்தால் அனுமதி வழங்க முடியாது" என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஒரே பாலின திருமணம் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக இன்று உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள மாறுபட்ட தீர்ப்புகளை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். பின்னர் விரிவான பதிலைப் பெறுவோம். இந்திய தேசிய காங்கிரஸ் எப்போதும் நமது குடிமக்கள் அனைவரின் சுதந்திரம், தேர்வுகள், உரிமைகளைப் பாதுகாக்க ஆதரவளிக்கிறது. அனைத்துக்கும் இடம் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கட்சி என்ற வகையில் நீதித் துறை, சமூகம் மற்றும் அரசியல் ஆகியவற்றில் பாரபட்சம் கூடாது என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

தன்பாலினர் திருமணங்களை சட்டபூர்வமாக அங்கீகரிக்க மறுக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக இந்த வழக்கில் மனுதாரர்கள் குழுவில் இருந்த அஞ்சலி கோபாலன் தெரிவித்துள்ளார். தத்தெடுப்பு தொடர்பாக தலைமை நீதிபதி கூறியது மிகவும் நல்ல விஷயம். ஆனால், மற்ற நீதிபதிகள் ஒப்புக் கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று அஞ்சலி கோபாலன் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் பார்வை என்ன? - முன்னதாக, இந்த வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததுபோது, ''தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று கோருவது நகர்ப்புற மேல்தட்டுப் பார்வை. தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணங்களை ஆதரிப்பதன் மூலம் ஒரு புதிய சமூக நிறுவனத்தை உருவாக்க நீதிமன்றம் முயலக் கூடாது. நீதிபதிகள் இந்தப் பணியை நாடாளுமன்றத்திடம் விட்டுவிட வேண்டும்.

இதுபோன்ற 'வேறு வகை' திருமணங்களை சமூக ரீதியாகவும், மத ரீதியாகவும் ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பது குறித்து மக்கள் முடிவு செய்வார்கள். ஒரு புதிய சமூக நிறுவனத்தை உருவாக்குவதற்கு உரிமை உண்டு என்பதாகவோ அல்லது அது தனி நபர் விருப்பம் என்பதாகவோ உரிமை கோர முடியாது. இது அடிப்படை உரிமையாகாது. தனி நபரின் விருப்ப உரிமையில் தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்தை அங்கீகரிப்பதற்கான உரிமை இல்லை. தற்போது திருமணம் என்பது சட்டத்தின்படியும், மதத்தின்படியும் புனிதமான ஒன்றாக, பன்முகத்தன்மை கொண்ட அமைப்பாக உள்ளது. தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டால், அது ஒவ்வொரு குடிமகனின் நலன்களையும் தீவிரமாக பாதிக்கும்'' என்று தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x