Published : 11 Oct 2023 06:32 AM
Last Updated : 11 Oct 2023 06:32 AM

டிசம்பர் 3-ல் தெலங்கானாவில் பாஜக ஆட்சி அமையும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய இணை அமைச்சரும் மாநில பாஜக தலைவருமான ஜி.கிஷண் ரெட்டி. பாஜக நிர்வாகிகள்

ஆதிலாபாத்: தெலங்கானாவில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் டிசம்பர் 3-ம் தேதி முதல், பாஜக ஆட்சி அமையும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.

தெலங்கானா மாநிலம், ஆதிலாபாத்தில் பாஜக சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு, பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:

பிரதமர் மோடியின் திறமையான ஆட்சி விரைவில் தெலங்கானாவில் அமையும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் டிசம்பர் 3-ம் தேதி முதல் இங்கு பாஜகவின் ஆட்சிக்கொடி பறக்கும். தெலங்கானாவில் பழங்குடி இனத்தவருக்காக அமையும் கிரிஜன பல்கலைக்கழகம் தாமதம் ஆனதற்கு முதல்வர் சந்திரசேகர ராவ்தான் காரணம். தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளாக ஏழைகளின் பிரச்சினைகள் தீரவில்லை. விவசாயிகள், தலித்துகள் மற்றும் பழங்குடியினரின் பிரச்சினைகளும் கண்டுகொள்ளப்படவில்லை.

ரகசிய கூட்டணி: ஏழை குடும்பத் தலைவி ஒவ்வொருவருக்கும் மானிய விலையில் பிரதமர் மோடி காஸ் சிலிண்டர் வழங்கி வருகிறார். விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வரவு வைக்கப்படுகிறது. அயோத்தி பிரச்சினை தீர்வுக்குப் பிறகு அங்கு ஸ்ரீராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. காஷ்மீரில் அமைதி திரும்பியுள்ளது.

தெலங்கானாதான் நாட்டின் முதன்மை மாநிலம் என்று முதல்வர் சந்திரசேகர ராவ் பெருமை பேசுகிறார். ஆனால் இங்கு விவசாயிகளின் தற்கொலையை அவரால் தடுக்க முடியவில்லை. ஒவைசி கட்சியுடன் அவர் ரகசிய கூட்டணி வைத்துள்ளார். தேர்தல்வந்துவிட்டால் காங்கிரஸ்காரர்களுக்கு திடீர் பாசம் வந்து விடும். அதனை நம்ப வேண்டாம். இவ்வாறு அமித் ஷா பேசினார்.

இக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சரும், தெலங்கானா மாநில பாஜக தலைவருமான கிஷண் ரெட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தெலங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 30-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்பட உள்ளது. தெலங்கானா மாநிலம் உதயமானதில் இருந்து இங்கு முதல்வராக சந்திரசேகர ராவ் பதவி வகிக்கிறார். அவர் மூன்றாவது முறையாக வென்று ஹாட்ரிக் சாதனை படைக்க முயன்று வருகிறார். எனினும் கர்நாடகாவில் கைநழுவிய ஆட்சியை தெலங்கானாவில் பிடிக்க பாஜக முயன்று வருகிறது. தெலங்கானாவில் இம்முறை ஆளும் பிஆர்எஸ் கட்சி, பாஜக, காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் தெலங்கானா ஆகிய கட்சிகள் இடையே நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x