Published : 10 Oct 2023 04:51 PM
Last Updated : 10 Oct 2023 04:51 PM

வெறுப்புப் பேச்சு: உரிமை மீறல் குழு முன்பு ஆஜராவதை ‘தவிர்த்த’ பாஜக எம்.பி

ரமேஷ் பிதுரி | கோப்புப்படம்

புதுடெல்லி: பகுஜன் சமாஜ் கட்சியின் டேனிஷ் அலியை நோக்கி வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான கருத்தை பேசி சர்ச்சையில் சிக்கியிருந்த பாஜக எம்.பி ரமேஷ் பிதுரி, நாடாளுமன்ற உரிமை மீறல் குழு முன்பு இன்று (அக்.10) ஆஜராக வேண்டிய நிலையில், முன்தீர்மானிக்கப்பட்ட நிகழ்ச்சிகளைக் காரணம் காட்டி, அவர் ஆஜராகவில்லை.

தற்போது அவர், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் கட்சிக்கான பிரச்சார வேலைகளில் தீவிரமாக உள்ளார். ரமேஷ் பிதுரி நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய டோக் மாவட்ட பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டடுள்ளார். ராஜஸ்தானில் நவம்பர் 23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

டோங்க் மாவட்டத்தில் குஜார் சமூகத்தினர் அதிகம் உள்ளனர். சச்சின் பைலட் இதே சமூகத்தைச் சேர்ந்தவரே. ரமேஷ் பிதுரியும் குஜார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் வாக்குகளை பெறுவதற்கு பிதுரியின் நியமனம் உதவும் என்று பாஜக நம்புகிறது. ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தின் பாஜக தேர்தல் பொறுப்பாளராக அக்கட்சியின் எம்.பி. ரமேஷ் பிதுரி கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். இது ‘வெறுப்பு பேச்சுக்கான வெகுமதி’ என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் கடந்த 21-ம் தேதி நடைபெற்றபோது மக்களவையில் சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது குறுக்கிட்ட பகுஜன் சமாஜ் எம்.பி டேனிஸ் அலியை தீவிரவாதி என்று கூறி தகாத வார்த்தைகளால், பாஜக எம்.பி ரமேஷ் பிதூரி திட்டினார். இதற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் வருத்தம் தெரிவித்தார். ரமேஷ் பிதூரியின் பேச்சு அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

அவையில் எம்.பி ரமேஷ் பிதாரி அநாகரீகமாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள், இந்த விவகாரத்தை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவையில் ரமேஷ் பிதூரி பேசிக்கொண்டிருந்தபோது, இடையில் குறுக்கிட்ட எம்.பி டேனிஸ் அலி, ரமேஷ் பிதூரியை ஆவேசப்பட தூண்டினார் என பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே உள்ளிட்ட பலரும் புகார் தெரிவித்திருந்தனர். இந்த புகார்களை பாஜக எம்.பி சுனில் குமார் சிங் தலைமையிலான உரிமை மீறல் குழுவுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x