Published : 08 Oct 2023 04:47 AM
Last Updated : 08 Oct 2023 04:47 AM

தெலங்கானா மாநிலத்தில் மெய்க்காவலரை கன்னத்தில் அறைந்த உள்துறை அமைச்சர்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அமீர்பேட்டையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை கால்நடைத் துறை அமைச்சர் தலசானி ஸ்ரீநிவாச யாதவ் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உள்துறை அமைச்சர் முகமது அலி கலந்துகொண்டார்.

அமைச்சர் ஸ்ரீநிவாச யாதவுக்கு நேற்று முன்தினம் பிறந்த நாள் என்பதால் அவருக்கு வாழ்த்து கூற அமைச்சர் முகமது அலி பூங்கொத்து கொண்டு வந்திருந்தார். நிகழ்ச்சிக்கு வந்ததும் ஸ்ரீநிவாச யாதவை கட்டித்தழுவி வாழ்த்து கூறினார்.

அப்போது யாதவுக்கு பூங்கொத்து கொடுக்க தனது மெய்க்காவலரை பார்த்தார் முகமது அலி. ஆனால் மெய்க்காவலர் பூங்கொத்தை எடுத்து வராததால் ஆத்திரமடைந்த முகமது அலி அவரது கன்னத்தில் அறைந்தார். அவரை ஸ்ரீநிவாச யாதவ் அமைதிப்படுத்தினார்.

இது தொடர்பான வீடியா சமூக வலைதளங்களில் வைரலானது. அமைச்சரின் இந்த செயலுக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் சமூக வலைதளங்களில் பொதுமக்களும் விமர்சித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x