Published : 22 Sep 2023 04:33 PM
Last Updated : 22 Sep 2023 04:33 PM

சாதிவாரி கணக்கெடுப்பை திசை திருப்பும் முயற்சியே மகளிர் இடஒதுக்கீடு மசோதா: ராகுல் காந்தி விமர்சனம்

செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி | படம்: கமல் நரங்.

புதுடெல்லி: "மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றத்தை காங்கிரஸ் வரவேற்கிறது. ஆனால், இது சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை திசைதிருப்பும் முயற்சியாக இருக்கிறது என்பதையும் சொல்லி ஆகவேண்டும்" என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைமையகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, "மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றத்தை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. ஆனால், இது சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை திசைதிருப்பும் முயற்சியாக இருக்கிறது. அதில் இரண்டு விஷயங்களை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஒன்று மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமலாவதற்கு முன்னர் ஒபிசி இடஒதுக்கீட்டை உறுதி செய்ய ஏதுவாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டும். இரண்டாவது தொகுதி மறுவரையறையையும் செய்து முடித்திருக்க வேண்டும். ஆனால் இவை செய்யப்படவில்லை.

இப்போது இவற்றுக்கு எல்லாம் காத்திருக்காமல் பிரதமர் நரேந்திர மோடி மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவராலாம். சொல்லப்போனால், இடஒதுக்கீட்டு சட்டத்தை இன்றைக்கே கூட அமல்படுத்தலாம். அது ஒன்றும் அவ்வளவு சிக்கலான விஷயம் இல்லை. ஆனால், இந்த அரசாங்கம் அதைச் செய்யுமா என்று தெரியவில்லை. ஏன் இந்தச் சட்டம் நிறைவேற்றபடாமலும்கூட போகலாம். மக்களின் முன்னால் இந்தச் சட்டத்தை இப்போது காட்டிவிட்டு பின்னர் 10 ஆண்டுகளுக்கு அப்புறமாக இது நிறைவேற்றப்படலாம்.

கடந்த 2010-ல் நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட்டபோதே அதில் ஓபிசி உள்ஒதுக்கீடு காங்கிரஸால் கொண்டுவரப்படாதது வருந்தத்தக்கதே. ஆனால், நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது நிச்சயமாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்.

பிரதமர் நரேந்திர மோடி தன்னை எப்போதும் ஓர் ஓபிசி தலைவர் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார். ஆனால் ஓபிசி, ஆதிவாசிகள், பட்டியலினத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உயர்மட்டத்தில் எத்தனை பேர் என்று விரல்விட்டு எண்ணினால் மூவர்தான். பாஜக எம்.பி,க்கள் வெறும் சிலைகள்தான். அவர்களுக்கென்று சட்டம் இயற்றுதலில் தனிப்பட்ட அதிகாரம் ஏதும் இல்லை.

இந்திய மக்கள் அனைவருக்கும் சமமாக அதிகாரத்தை பகிர்ந்தளித்தல் என்பதுதான் முதல் அடியாக இருக்கும். சாதிவாரி கணக்கெடுப்பு தரும் புள்ளிவிவரம் மக்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளித்தளிக்க் உதவும்" என்று ராகுல் காந்தி கூறினார்.

முன்னதாக, மக்களவையில் நடந்த விவாதத்தின்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பேசுகையில், “மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்பது முன்னாள் பிரதமர்ராஜீவ் காந்தியின் கனவு. இந்த மசோதாவை காங்கிரஸ் சார்பில் ஆதரிக்கிறேன். மசோதாவை நிறைவேற்றி, தாமதமின்றி விரைந்து அமலுக்கு கொண்டுவர வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, தலித், பழங்குடியின பெண்களுக்கு உள் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கும் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்று பேசினார்.

திரிணமூல் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரிகள், சமாஜ்வாதி உட்பட அனைத்து கட்சி உறுப்பினர்களும் மசோதாவை வரவேற்று பேசினர். ஓபிசி பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பெரும்பாலான உறுப்பினர்கள் வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x